லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதை பாராட்டி, சாய்னா நேவாலுக்கு ஹைதராபாத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆந்திரா மாநில பாட்மிண்டன் சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு, பி.எம்.டபிள்யூ சொகுசு காரை சாய்னா நேவாலுக்கு பரிசாக வழங்கினார்.
அப்போது பேசிய சாய்னா நேவால், இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பது போல, பாட்மிண்டனும் பிரபலமாகி வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து சாய்னா நேவால் கூறியதாவது,
எனக்கு 9 வயது இருந்த போதே, ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கனவு காண துவங்கினேன். ஆனால் தற்போது அந்த கனவு நினைவாகி இருப்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை. இதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது ஒலிம்பிக் பதக்க கனவை நினைவாக்க உதவிய பயிற்சியாளர் கோபிசந்த்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவர் பல ஆண்டுகளாக இதற்காக கடினமாக உழைத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் நான் பதக்கம் வென்றிருப்பதன் மூலம், இந்தியாவில் பாட்மிண்டன் விளையாட்டிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பாட்மிண்டன் போட்டிகளில் பல பதக்கங்கள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்தியாவில் கிரிக்கெட்டை போல பாட்மிண்டனும் பிரபலமாகி வருவதாக நம்புகிறேன் என்றார்.