ஜப்பானை வீழ்த்தி வெற்றி
நேற்று இரவு இடந்த பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பைனலில், தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த், 21-14, 21-13 என்ற கணக்கில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை சுலபமாக வென்றார்.
புதிய சாதனைக்கு சொந்தக்காரர்
இதன் மூலம், ஒரு ஆண்டில், நான்கு சூப்பர் சீரியர்ஸ் பட்டம் வென்ற புதிய சாதனை அவர் படைத்துள்ளார். இதற்கு முன், பாட்மின்டன் சூப்பர் ஸ்டார்களான டின் டான், லீசாங்க் வீல, சென் லாங்க் ஆகியோர் மட்டுமே ஒரே ஆண்டில் நான்கு பட்டங்கள் வென்றுள்ளனர். அந்த வரிசையில் நான்காவது வீரராக, 24 வயதாகும் ஸ்ரீகாந்த் இணைந்துள்ளார்.
சாதனையை முறியடிக்க வாய்ப்பு
அடுத்ததாக, நவம்பர் 14 முதல் 19 வரை சீன ஓபன் போட்டிகளும், நவம்பர் 21 முதல் 26 வரை ஹாங்காங் ஓபன் போட்டிகளும், கடைசியில், டிசம்பர் 13 முதல் 17 வரை சூப்பர் சீரியஸ் மாஸ்டர்ஸ் பைனல்ஸ் போட்டிகளும் நடக்க உள்ளன. அதனால், ஒரே ஆண்டில் அதிக பட்டம் வென்ற சாதனையை நிகழ்த்த ஸ்ரீகாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
உலகில் கலக்கும் இந்தியா
இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள 10 சூப்பர் சீரியஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு 7 பட்டங்கள் கிடைத்துள்ளன. இந்திய ஓபன் மற்றும் கொரிய ஓபன் மகளிர் ஒற்றையரில் பி.வி. சிந்து, சிங்கப்பூர் ஓபனில் ஆடவர் ஒற்றையரில் பி. சாய் பிரனீத், இந்தோனேசிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், டென்மார்க் ஓபனில் மற்றும் தற்போது பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையரில் கிடாம்பி ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளனர்.
அதிக பட்டங்கள் வென்ற நாடுகளில் சீனா (11 பட்டங்கள்), இந்தோனேசியா (9 பட்டங்கள்), முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா, 7 பட்டங்களுடன், மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.