பலகல்லே, இலங்கை: இலங்கைக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா புதிய உலக சாதனை படைத்தது. 3 விக்கெட்களை மட்டுமே இழந்த அந்த அணி 263 ரன்களைக் குவித்து இலங்கையை நையப்புடைத்து விட்டது.
அதிரடியாக ஆடிய கிளன் மாக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 145 ரன்களைக் குவித்தார். இந்த ரன்களை அவர் 65 பந்துகளில் விளாசினார். இதுவரை டி20 போட்டிகளில் இந்த அளவுக்கு பெரிய ஸ்கோரை எந்த அணியும் எட்டியதில்லை. அந்த வகையில் இது உலக சாதனையாக மாறியுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி பலகல்லே மைதானத்தில் இன்று நடந்தது. இதில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்களை இழந்து 263 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கி கிளன் மாக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். 9 சிக்ஸர்களையும், 14 பவுண்டரிகளையும் அவர் கொளுத்தினார். அவரது அதிரடி ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலியா உலக சாதனை படைத்தது.
ஏற்கனவே டி20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த சாதனை இலங்கையிடம்தான் இருந்தது. அதை இன்று ஆஸ்திரேலியா தட்டிப் பறித்து விட்டது. 2007ம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்க்கில் கென்யாவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களைக் குவித்து சாதனை படைத்திருந்தது இலங்கை. அதை இன்று முறியடித்து விட்டது ஆஸ்திரேலியா.
தனிப்பட்ட வீரர்கள் வரிசையில் டி20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த சாதனை ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் வசம் உள்ளது. அவர் 156 ரன்களைக் குவித்துள்ளார். அந்த சாதனையை மேக்ஸ்வெல்லால் முறியடிக்க முடியாமல் போய் விட்டது.