99 ரன்கள்
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியை 99 ரன்களிலேயே சுருட்டிய வீழ்த்தியது இந்திய பவுலிங். முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே 170 ரன்கள் விளாசியிருந்த நிலையில், ஸ்ரன் வருகை ஜிம்பாப்வேயை கட்டிப்போட்டது என்றுதான் கூற வேண்டும்.
அசத்தல் பவுலிங்
ஏனெனில் பரிந்தர் ஸ்ரன், 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது முதல் டி20 சர்வதேச போட்டியிலேயே முத்திரை பதித்தார். நெருக்கடி இல்லாமல் ஆடியதாலும், பந்து ஸ்விங் ஆனதாலும் மகிழ்ச்சியாக ஆடியதாக போட்டிக்கு பிறகு மேன் ஆப் தி மேட்ச் விருது வாங்கியபோது ஸ்ரன் குறிப்பிட்டார்.
டோணி புகழாரம்
இரண்டாவது பேட் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. பவுலர்கள் பங்களிப்புதான் இதற்கு காரணம் என வெற்றிக்கு பிறகு கேப்டன் டோணி புகழாரம் சூட்டினார். ஃபீல்டர்களும் நன்கு சப்போர்ட் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
பேட்டிங் கஷ்டம்
இந்த பிட்ச்சில் தொடர்ந்து போட்டி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் பேட்டிங் செய்வது கஷ்டமான காரியமாக இருப்பதாகவும், டாசில் வென்றிருந்தால் தானும் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்திருப்பேன் என்றும், டோணி குறிப்பிட்டார். இது குறிப்பிடத்தக்க வெற்றி என பாராட்டவும் டோணி மறக்கவில்லை.
கொக்கரிப்பு
ஜிம்பாப்வே கேப்டன் கிரேம் கிரீமர் கூறுகையில், முதல் போட்டியை வென்றுவிட்டு 2வது போட்டியில் இப்படி சரணடைந்தது சரியில்லை. பேட்டிங் செய்ய கஷ்டமான பிட்ச் என்றபோதிலும் 99 ரன்களில் சுருண்டிருக்க கூடாது. 3வது போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றுவோம் என்று இன்னமும் நம்பிக்கையுள்ளது என்றார்.