ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் நடுவேயான 2வது டி20 போட்டியில் டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஹராரே மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது போட்டி அதே மைதானத்தில் இன்று நடந்தது.
டாசில் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் கிரேம் கிரிமர் தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய அணியில் ரிஷி தவான் மற்றும் ஜாதவ் உனட்கட் ஆகியோருக்கு பதிலாக, ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய பவுலர்கள், தவல் குல்கர்ணி மற்றும் பரிந்தர் ஸ்ரன் களமிறக்கப்பட்டனர்.
ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக சிபாபா, மசகட்சா ஆகியோர் களம் இறங்கினார்கள். சிபாபா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரன் பந்தில் அவுட் ஆனார். அடுத்து மூர் களம் இறங்கினார். 5-வது ஓவரை ஸ்ரன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் மசகட்சாவும் (10), 5-வது பந்தில் சிகந்தர் ரசாவும் (1), கடைசி பந்தில் முடோம்போட்ஸிம் (0) அவுட் ஆனார்கள்.
ஸ்ரன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து ஜிம்பாப்வே தடுமாறியது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மூர் மட்டும் 31 ரன்கள் சேர்த்தார்.
ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்ரன் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பும்ப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகேஷ் ராகுல், மன்தீப் சிங் ஜோடி நல்ல துவக்கம் தந்தனர். ஜிம்பாப்வே பந்து வீச்சை சிதறடித்த மன்தீப் அரைசதம் கடந்து அணியை வெற்றி அழைத்துச் சென்றார்.
இந்திய அணி 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மன்தீப் சிங் (52), ராகுல் (47) ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 -1 என இந்தியா சமன் செய்தது. 3வது மற்றும் கடைசி போட்டி 22 ஆம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும்.