இந்தியா சாதனை
7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்களை குவித்து கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பதிவு செய்த உச்சபட்ச டெஸ்ட் ஸ்கோர் இதுவாகும். இந்த சாதனையில் கருண் நாயரின் பங்கு பாதிக்கும் மேல் என்பதை அவரது ரன் குவிப்பே உலகிற்கு விளக்கும்.
சேவாக் சாதனை
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்திர சேவாக், இதற்கு முன்பு இரு முறை முச்சதம் கடந்துள்ளார். அதன்பிறகு முச்சதம் கடந்த 2வது இந்திய வீரர் கருண் நாயர்தான். 309 மற்றும் 319 ரன்களை சேவாக் குவித்திருந்தார். இன்று கருண் இருந்த வேகத்திற்கு இந்த ரன்னையும், முந்தியிருக்க கூடும். ஆனால், ஏற்கனவே கூறியபடி இன்னும் ஒருநாள் தான் பாக்கியுள்ள நிலையில், அணியின் வெற்றி வாய்ப்புக்காக கோஹ்லி அந்த ரன் மிஷினை தற்காலிகமாக நிறுத்திவிட்டார். இளம் வீரரான கருண் நாயர் அச்சாதனையை இனி வருங்காலங்களில் படைப்பார் என்பதே ரசிகர்கள் நம்பிக்கை.
|
பாராட்டும் சேவாக்
சேவாக்கும், கருண் நாயரின் சாதனையை டிவிட்டரில் பாராட்டியுள்ளார். தான் மட்டும் தனித்து இருந்ததாகவும், இப்போது ஜோடிக்கு ஆள் கிடைத்துவிட்டதாகவும் அவர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
டோணி சாதனை முறியடிப்பு
மேலும் பல சாதனைகளும் நாயரின் பேட்டிலிருந்து புறப்பட்டன. இந்திய வீரர் ஒருவர் 5வது அல்லது அதற்கு பிறகு பேட்டிங் ஆர்டரில் களமிறங்கி குவித்த அதிகபட்ச ரன் இதுவாகும். முன்பு, டோணி ஆஸி.க்கு எதிராக 224 ரன்கள் குவித்ததே சாதனை.
ஜாம்பவான்கள்
5வது மற்றும் அதற்கு பிறகு களமிறங்கி 200 ரன்களை தாண்டியது மொத்தமே 3 வீரர்கள்தான். டோணியும், லட்சுமணனும்தான் முன்பு இதை செய்திருந்தனர். சச்சின், ராகுல் டிராவிட், லட்சுமண் போன்ற இந்தியா கண்ட பல டெஸ்ட் ஜாம்பவான்களின் தனிப்பட்ட அதிகபட்ச ரன் ஸ்கோரை கருண் நாயர் கடந்துவிட்டார்.
ருசி கண்ட புலி
கடந்த வருடம் ரஞ்சி போட்டியில் கர்நாடகாவுக்காக ஆடிய இந்த 'சேரநாட்டு' பூர்வீகக்காரர், தமிழகத்திற்கு எதிராக 329 ரன்களை குவித்து முச்சத ருசியை அறிந்தவர்தான்.