அதிரடி தொடக்கம்
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரான் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய இளம் வீரர் சுப்மான் கில் மற்றும் ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒரு நாள் அணிக்கு திரும்பிய சுப்மான் கில் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். மறுமுனையில் ஷிகர் தவானும் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
308 ரன்கள்
சுப்மான் கில் 64 ரன்களில் கவனக்குறைவால் ரன் அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் குவித்தது. சதத்தை நெருங்கி கொண்டிருந்த ஷிகர் தவான் 97 ரன்களில் ஆட்டம் இழந்தார்.மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 13 ரன்களில் உசேன் பந்தில் போல்ட் ஆகினார். தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.இறுதியில் தீபக் ஹூடா 27 ரன்களும், அக்சர் பட்டேல் 21 ரன்களும் எடுக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 308 ரன்களை 7 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது.
தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்
இதனையடுத்து 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஷாய் ஹோப் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கெயில் மெயர்ஸ், புருக்ஸ் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். புருக்ஸ் 46 ரன்களில் வெளியேற, கெயில் மெயர்ஸ் 75 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் பூரான் 25 ரன்களிலும், அதிரடி வீரர் பொவேல் 6 ரன்களில் வெளியேறினர்.
பிராண்டன் கிங் அரைசதம்
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது தான் ஆட்டத்தில் ஒரு டிவிஸ்ட் நிகழ்ந்தது. நடுவரிசையில் களமிறங்கிய பிராண்டன் கிங் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. எனினும் அவர் 54 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் பரபரப்பு
இறுதியில் 5 ஓவரில் 54 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷெபர்ட் மற்றும் ஆக்கில் ஹூசைன் அதிரடியாக விளையாட தொடங்கினர். குறிப்பாக 47வது ஓவரில் 9 ரன்களும், 48வது ஓவரில் 11 ரன்களும், 49வது ஓவரில் 12 ரன்களும் அடித்தனர். இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
வெற்றிக்கு 15 ரன் தேவை
இதனையடுத்து சிராஜ் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்து ரன் ஏதும் செல்லவில்லை. இரண்டாவது பந்தில் ஒரு ரன் செல்ல, 3வது பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனையடுத்து 4வது பந்தில் 2 ரன்னும், 5வது பந்தில் ஓயிடும் சென்றது. கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது.ஆனால் வெஸ்ட் இண்டீஸ்அணியால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து அந்த அணி 305 ரன்களை மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய வீரர்கள் எக்ஸ்டிராசாக 21 ரன்கள் கொடுத்தது, கடும் நெருக்கடியில் அணியை தள்ளியது.