காபூல்: காபூலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்துள்ளது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜெர்மனி, பிரான்ஸ், இந்திய நாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 90 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 463 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு இயக்குனரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், ஹக்கானி குழுவுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடனான நட்பு ரீதியான போட்டியை ரத்து செய்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இரு நாடுகளுக்கும் இடையில் எந்தவொரு போட்டியும் கிடையாது என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என மத்திய அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்திருந்தார். தற்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுடான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்துள்ளது.