கிரிக்கெட் ஆடிய காலம்
ஷஹித் அப்ரிடி - கெளதம் கம்பீர் இருவருக்கும் கிரிக்கெட் ஆடிய காலத்திலேயே பலத்த கருத்து வேறுபாடு, உரசல்கள் இருந்தன. களத்தில் முட்டிக் கொள்வதும், திட்டிக் கொள்வதும் இருவருக்கும் சகஜமாக இருந்தது.
பல்வேறு மோதல்கள்
தற்போது கிரிக்கெட்டை தாண்டி சமூக ஊடகத்தில் எந்த எல்லைக் கட்டுப்பாடும் இன்றி இருவரும் மோதிக் கொண்டு வருகின்றனர். அப்ரிடி எழுதிய சுயசரிதை புத்தகத்தில் கம்பீரை மிக மோசமாக விமர்சித்து இருந்தார். அது மிகப் பெரிய அளவில் இருவருக்கும் இடையே மோதலை தொடங்கி வைத்தது.
காஷ்மீர் பிரச்சனை
இடையே சிறிது காலம் இருவரும் மோதிக் கொள்ளாமல் இருந்தார்கள். காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை அடுத்து, இருவரும் அது தொடர்பாக கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இவர்கள் மோதலில் கருத்தெல்லாம் இல்லை. சின்னப்புள்ளத்தனம் தான் அதிகமாக உள்ளது.
அழைப்பு விடுத்தார்
சமீபத்தில் நடந்த சம்பவத்தையே பார்ப்போம். அப்ரிடி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஆதரவாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல உள்ளதாகவும், அதற்கு மக்களும் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது ட்வீட் போட்டு இருந்தார்.
முதிர்ச்சி இல்லை
அதைக் கண்ட கெளதம் கம்பீர், அப்ரிடிக்கு முதிர்ச்சியே இல்லை. அவருக்கு உதவி செய்ய குழந்தைகள் புத்தகம் வாங்கி அனுப்பப் போகிறேன் என்று பதில் கூறி இருந்தார். அத்தோடு விடவில்லை.
மூளை இல்லை
இது குறித்து ஊடகங்களில் பேட்டி அளித்த அவர், அப்ரிடி வயதை குறைத்து கிரிக்கெட் ஆடியதை சூசகமாக கிண்டல் அடித்தும் அவர் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதற்கு மூளை வேண்டும். அது அவரிடம் இல்லை என்றும் கூறினார்.
அப்ரிடி பதிலடி
இதற்கு தற்போது அப்ரிடி பதில் அளித்துள்ளார். தன் பதிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மனநல ஆலோசகர் பாடி ஆப்டன் கம்பீர் குறித்து தெரிவித்து இருந்த சர்ச்சை கருத்து ஒன்றை சுட்டிக் காட்டி, "எனக்கு இது தான் நினைவுக்கு வருகிறது" என கிண்டல் அடித்துள்ளார்.
பாடி ஆப்டன் சர்ச்சை கருத்து
பாடி ஆப்டன் கம்பீர் குறித்து, "நான் பணியாற்றிய மக்களில் கெளதம் கம்பீர் மிகவும் பலவீனமான, மனதளவில் மிகவும் பாதுகாப்பற்ற ஒருவர்" என்று கூறி இருக்கிறார். இதை வைத்து அப்ரிடி கம்பீரை கிண்டல் அடித்துள்ளார்.
குழந்தைகள் சண்டை
இவர்கள் இருவரும் குழந்தைகள் போல மொக்கையான விஷயங்களை வைத்து சண்டை போட்டு வருவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. கருத்து மோதலாக இல்லாமல், தனி நபர் கிண்டலாக இது இருப்பது அதிர்ச்சியாகவும் உள்ளது.
அடுத்து அரசியல்
கம்பீர் ஏற்கனவே இந்திய அரசியலில் குதித்து விட்டார். பாகிஸ்தானில் அப்ரிடி, பிரதமர் இம்ரான் கான் கருத்துகளை பரப்பி வருவதை வைத்துப் பார்த்தால், அவரும் அங்கே அரசியலில் குதிக்க வாய்ப்புள்ளது. அதன் பின், இவர்கள் இருவரும் எப்படி சண்டை போட்டுக் கொள்வார்கள் என நினைத்தால், இப்போதே கதி கலங்குகிறது.