மகாராஷ்டிரா நிதானம்
செளராஷ்டிரா அணியின் அபார பந்துவீச்சால் மகாராஷ்டிரா அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். 30 ஓவர்கள் விளையாடியும் மகாராஷ்டிரா அணி பேட்ஸ்மேன்களால் 100 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் அரைசதம் விளாசிய பின்னர் அதிரடிக்கு மாறினார். இதன் பலனாக மகாராஷ்டிரா அணி 42 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது.
சதம் விளாசிய ருதுராஜ்
அதுமட்டுமல்லாமல் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் சதம் விளாசி அசத்தினார். ஆனால் 44வது ஓவரின் போது 108 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்தது. செளராஷ்டிரா அணி தரப்பில் சிராக் ஜானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
செளராஷ்டிரா அபாரம்
செளராஷ்டிரா அணிக்கு குறைந்த இலக்கு என்றாலும் ஒரு பேட்ஸ்மேன் ந்லைத்து நின்று ஆட வேண்டிய தேவை இருந்தது. அதற்கேற்ப தொடக்கம் முதலே செளராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய் - ஷெல்டன் ஜாக்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்விக் தேசாய் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
14 ஆண்டுகள்
பின்னர் களமிறங்கிய சமர்த், அர்பித் உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், சிறப்பாக ஆடிய ஷெல்டன் ஜாக்சன் சதம் விளாசி அசத்தினார். இதன் பலனாக செளராஷ்டிரா அணி 46.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷெல்டன் ஜாக்சன் 133 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் செளராஷ்டிரா அணி விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றியுள்ளது.
உனாத்கட் சாதனை
ஏற்கனவே ரஞ்சி டிராபி தொடரை செளராஷ்டிரா அணிக்காக உனாத்கட் வென்று கொடுத்த நிலையில், தற்போது விஜய் ஹசாரே தொடரையும் கேப்டனாக முன்நின்று கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷெல்டன் ஜாக்சன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் தொடர் நாயகனாக 4 சதங்கள் விளாசிய ருதுராஜ் கெயிக்வாட் தேர்வு செய்யப்பட்டார்.