மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் இருந்து நடிகர் ரன்வீர் சிங் விலகியுள்ள நிலையில், நடிகை பரினிதி சோப்ராவும் விலகியுள்ளார்.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நாளை மறுநாள் துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன. ஏப்ரல் 7ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோத உள்ளன.
இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்புவதால், இந்த சீசன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான துவக்க விழா மும்பை வாங்கடே மைதானத்தில் நாளை மறுநாள் மாலை நடக்க உள்ளது.
கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரபல நடிகர் ரன்வீர் சிங், நடிகை பரினிதி சோப்ரா ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காயம் காரணமாக துவக்க விழாவில் பங்கேற்க முடியாது என, ரன்வீர் சிங் ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்த நிலையில், துவக்க விழாவில் பங்கேற்க முடியாது என நடிகை பரினிதி சோப்ராவும் கூறியுள்ளார். நமஸ்தே இங்கிலாந்து என்ற ஹிந்தி படத்தின் சூட்டிங் பட்டியாலாவில் தொடர்ந்து நடப்பதால், ஐபிஎல் துவக்க விழாவில் பங்கேற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.