டெல்லி: பிரீமியர் புட்சால் லீக் (பிஎப்எல்) கால்பந்து போட்டியை நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்கள் அமைப்பு மட்டுமே இந்தியாவில் கால்பந்தாட்டத்தை நடத்த தகுதியுடைய அமைப்பு என்று கூறியுள்ளது.
போர்ச்சுக்கீசிய பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் ஃபிகோவின் தலைமையிலான பிரீமியர் புட்சால் லீக், வரும் ஜூலை 15 முதல் 24 வரையில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த விளையாட்டை பிரபலப்படுத்தம் வகையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு பாடல் உருவாக இருக்கிறது. இந்த பாடலை பல பாடகர்கள் பாடவுள்ள நிலையில் அவர்களில் ஒருவராக விராட் கோஹ்லியும் இந்த பாடலின் ராப் பகுதியை பாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தொடருக்கு ஒரு சிக்கல் வந்துள்ளது.
இதுதொடர்பாக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் செயலர் குஷால் தாஸ் மாநில கால்பந்து சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: புட்சால் உள்பட, இந்தியாவில் உள்ள அனைத்து வகையான கால்பந்து போட்டிகளையும், அமைப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தான் உள்ளது.
பிரீமியர் புட்சால் லீக்கை நடத்தும் இந்திய புட்சால் சங்கம் அங்கீகரிக்கப்படாத ஒரு அமைப்பு என்று விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீமியர் புட்சால் லீக்குடன் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. அந்தப் போட்டி கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படவோ, அனுமதிக்கப்படவோ இல்லை. எனவே, புட்சால் லீக் போட்டிக்கு எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அத்துடன், மாநில கால்பந்து சங்கங்கள் யாவும் தங்களிடம் அங்கம் வகிக்கும் கால்பந்து கிளப்புகள் மற்றும் வீரர்களிடம் பிரீமியர் புட்சால் லீக்கிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.