ஐபிஎல் மூலம் மீண்ட ராயுடு
அம்பதி ராயுடு முன்பு இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வந்தார். எனினும், பார்ம் அவுட், காயம் ஆகிய காரணங்களால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற ராயுடு, நீண்ட காலத்துக்குப் பின் நிலையான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். சென்ற ஐபிஎல் சீசனில் 602 ரன்கள் குவித்த ராயுடு சராசரி 43 வைத்திருந்தார்.
ராயுடு வாய்ப்பு பெற்றார்
இதை அடுத்து இந்திய அணியில் இடம் பெற்ற அம்பதி ராயுடு, யோ-யோ தேர்வில் தோல்வி அடைந்து இங்கிலாந்து தொடரில் ஆடும் வாய்ப்பை நழுவவிட்டார். எனினும், ஆசிய கோப்பையில் இடம் பிடித்து மூன்றாம் இடத்தில் களம் இறங்கி ஆடிய ராயுடு 6 இன்னிங்க்ஸ்களில் 175 ரன்கள் குவித்தார். சராசரி 43.75.
உலகக்கோப்பை அணியில் ராயுடு?
இதை அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ள ராயுடு, கிட்டத்தட்ட அணியில் தன் இடத்தை நிரந்தரமாக மாற்றிக் கொள்ள உள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இன்னும் 18 ஒருநாள் போட்டிகளில் தான் இந்திய அணி ஆட உள்ளது. ராயுடுவும் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என நாம் நம்பலாம். அதற்கான, ஏற்பாடுகள் தான் இப்போது நடந்து வருகிறது.
ராயுடு மாற்றம் அளிப்பார்
ராயுடு முதிர்ச்சியான பேட்டிங் திறன் கொண்டு இருப்பதால், நடுவரிசையில் சொதப்பி வரும் இந்திய அணிக்கு ராயுடு பெரிய மாற்றமாக இருப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கேப்டன் கோலி. மேலும், அம்பதி ராயுடு "நடுவரிசை பேட்டிங் செய்யவே தயாரிக்கப்பட்டவர்" எனவும் குறிப்பிட்டுள்ளார் கோலி.