கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும்வகையில், பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்தும் நடைமுறைக்கு ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி குழு தடை விதித்து பரிந்துரைத்துள்ளது. இந்த குழுவின் தலைவர், அனில் கும்ப்ளே இது தற்காலிகமான முடிவுதான் என்று தெரிவித்துள்ள போதிலும், எச்சிலுக்கு மாற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட பௌலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைக்கு சாத்தியம் இல்லை
இந்நிலையில் எச்சிலுக்கு மாற்று கொண்டுவருவது இயலாத காரியம் என்றும் கடந்த வருடங்களில் பந்தை ஷைன் செய்ய எதை பயன்படுத்த வேண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதில் மிகவும் கடுமையாக செயல்பட்டதால் தற்போது இது சாத்தியப்படாது என்றும் கும்ப்ளே குறிப்பிட்டுள்ளார். மேலும் எச்சிலுக்கு மாற்றை கொண்டுவந்தால் ஆட்டத்தின் அழகே போய்விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பின்னர்களை பயன்படுத்தலாம்
எச்சிலுக்கு மாற்றாக பிட்சை சரியான முறையில் பயன்படுத்தி பௌலிங் போட வேண்டும் என்றும் கும்ப்ளே அறிவுறுத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு ஸ்பின்னர்களை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் குறித்து நாம் கவலைக் கொள்ள வேண்டியதில்லை என்று கூறியுள்ள கும்ப்ளே, டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் ஸ்பின்னர்களை நுழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
பௌலர்கள் தயாராக வேண்டும்
எச்சிலை பயன்படுத்தாமல் பௌலிங் போடுவதற்கு தங்களை பௌலர்கள் மாற்றிக் கொள்வது கடினமான செயல் என்பதை ஒப்புக் கொண்டுள்ள கும்ப்ளே, பயிற்சி ஆட்டங்கள் மீண்டும் துவங்கும்போது, இதற்கு பௌலர்கள் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு மேல் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில், திரும்பி வந்து உடனடியாக போட்டிகளில் விளையாடுவது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.