டெல்லி:இந்த ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், ரசல் ஆகியோரின் சாதனையை முறியடித்து சிக்சர் மன்னரானார் கேப்டன் கூல் தோனி.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசன் நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் இருந்தே பாம்கள் கொண்ட சரவெடி போல் தூள் கிளப்பி வருகிறது.
அதிரடி ரன் குவிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கில்லியாக உள்ளது. அணியின் பெரும்பாலானோர் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் விளாசி வருகின்றனர்.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சிஎஸ்கே, இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடித்துள்ள அணிகளிலும் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 86 சிக்சர்களை பறக்க விட்டுள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி 75, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 74 சிக்சர்களை அடித்துள்ளன. கொல்கத்தா 71, பஞ்சாப் 50, மும்பை 48, ராஜஸ்தான் 44, ஹைதராபாத் 28 சிக்சர்களை அடித்துள்ளன.
சிக்சர் மன்னரான தோனி
இதையெல்லாம்விட, இந்த சீசனில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். அவர் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் 20 சிக்சர்களை அடித்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்த இந்தியராக அவர் உள்ளார்.
பஞ்சாபின் கிறிஸ் கெயில், பெங்களூரின் டிவில்லியர்ஸ், கொல்கத்தாவின் ஆந்தரே ரசல் ஆகியோர் 23 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் இருந்தனர்.
கொல்கத்தாவில் நடக்கும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு சிக்சர்கள் அடித்து கெயில் உள்ளிட்டோரின் சாதனையை முறியடித்தார் தோனி.
சிஎஸ்கே வீரர் ராயுடு மற்றும் டெல்லியின் ரிஷப் பந்த் ஆகியோரும் 20 சிக்சர்களை அடித்துள்ளனர்.