ராஜ்கோட் : ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டி ராஜ்காட்டில் நடைபெற்றுவரும் நிலையில், அதன் பிட்ச் மிகவும் மோசமாக உள்ளதாக பெங்கால் அணியின் பயிற்சியாளர் அருண் லால் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிசிசிஐ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் தான் நேரிடையாக இந்த விவகாரம் குறித்து பேச மாட்டேன் என்றும் அது தன்னுடைய வேலை இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சிக் கோப்பையின் இறுதிப்போட்டி ராஜ்காட்டில் நடைபெற்று வரும்நிலையில், அந்த மைதானத்தின் பிட்ச் மிகவும் மோசமாக உள்ளதாக இறுதி போட்டியில் ஆடிவரும் பெங்கால் அணியின் பயிற்சியாளர் அருண் லால் குற்றம் சாட்டியுள்ளார். ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டி போன்ற மிக முக்கியமான போட்டியில் பிட்ச் இவ்வளவு மோசமாக இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது என்று தெரிவித்துள்ள அருண் லால், இதுகுறித்து பிசிசிஐ உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 13 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அருண் லால், தற்போது பெங்கால் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மோசமான பிட்ச் காரணமாக சௌராஷ்டிரா அணி, மிகவும் குறுகிய நேரத்திலேயே 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை எடுத்துள்ளதை சுட்டிக் காட்டிய அருண் லால், பார்ப்பதற்கு சிறப்பாக இருப்பதாக காணப்படும் இந்த பிட்ச்சில் வீசப்படும் பந்துகள் ஸ்லோவாக போவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அருண் லால், முக்கிய போட்டிகள் நடைபெறுவதற்கு 15 நாட்கள் முன்னதாக உரிய மேற்பார்வையாளர்களை அனுப்பி பிட்ச்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை சந்தித்து பேசுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அருண் லால், அது தன்னுடைய வேலை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெங்கால் அணி, தற்போது சௌராஷ்டிரா அணியின் ரன் குவிப்பை தடுக்க வேண்டும் என்றும் 300 ரன்களுக்குள் அவர்களை சுருட்ட வேண்டும் என்றும் அருண் லால் தெரிவித்துள்ளார். மேலும் முடிவுகள் குறித்து தான் கவலைப்படவில்லை என்றும் முடிவுகள் எப்படி இருந்தாலும், இறுதிவரை தங்கள் அணியினர் போராடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் அணியின் சுதிப் குமார் கராமி மிக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடி இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்த கங்குலி போல கராமியும் மிகச்சிறந்த உயரங்களை தொடுவார் என்றும் அருண் லால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.