நாட்டிங்ஹாம்: ஆஷஸ் கோப்பை கிரிக்கெட்டில் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியாவை 60 ரன்களுக்குள் சுருட்டி வீசியது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவின் 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 9.3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சரித்திரம் படைத்தார்.
இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
ஏற்கெனவே இரு போட்டிகளில் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் முனைப்புடன் களமிறங்கியது.
இன்றைய போட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஆனால் ஆஸ்திரேலியா அணியால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இங்கிலாந்து அணியின் ஸ்டூவர் பிராட் பந்துவீச்சு அமைந்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ரோகர்ஸ் மற்றும் ஸ்மித் 0 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். மற்றொரு தொடக்க வீரர் வார்னர் 6 ரன்கள்தான் எடுத்து அவுட் ஆனார்.
ஸ்டூவர்ட்டின் பந்துவீச்சை ஆஸ்திரேலியாவின் ஒரு வீரர் கூட எதிர்கொண்டு நிலைத்து ஆடவில்லை. கிளார்க் 10 ரன்கள், ஜோன்சன் 13 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
எஞ்சிய வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்க ரன்னிலேயே அவுட் ஆகினர். 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 60 ரன்களையே ஆஸ்திரேலியா அணியால் எடுக்க முடிந்தது.
இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் 9.3 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளி ஆஸ்திரேலியாவை அலற வைத்தார். தற்போது இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.