துபாய்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஷ் தொடரில் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் தகவல்களை ஐசிசி மறுத்துள்ளது.
'தி சன்' ஆங்கில டேப்ளாய்ட் பத்திரிகை சூதாட்ட புக்கிகளுடன் தங்கள் நிருபர்கள் நடத்திய கலந்துரையாடல்களை வெளியிட்டது. அதில், ஆஷஷ் டெஸ்ட் தொடரில் சூதாட்டம் நடைபெறுவதாக தெரிவித்திருந்தது. பெர்த் டெஸ்டில் சூதாட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஐசிசி ஊழல் ஒழிப்பு பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் கூறுகையில், பெர்த்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெறுவதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை. தி சன் பத்திரிகை மற்றும் எங்களது உளவு பிரிவு வழங்கிய தகவல்களை சோதித்து பார்த்த நிலையில், சூதாட்டம் நடைபெறவில்லை என்பதே முதல் கட்டமாக எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்.
எந்த ஒரு வீரரும், சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் உள்ளதாக ஆதாரம் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளை மிகவும் சீரியசாக எடுத்துள்ளோம். எனவே தி சன் பத்திரிகையிடமிருந்து ஆதாரங்களை கேட்டு பெற்றுள்ளோம். அனைத்து வகை ஆதாரங்களையும் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்துவோம் என்றார்.