இந்திய- நியூசிலாந்து போட்டியின் டி- 20 அணி அறிவிப்பு
நியூசிலாந்து அணியுடன் மோதும் இந்திய டி-20 அணியின் விவரங்கள் நேற்று பிசிசிஐயால் வெளியிடப்பட்டன. 15 பேர் கொண்ட கோஹ்லி தலைமையிலான அணியில் வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. இந்த அணியில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் அனுபவம் மிகுந்த பிளேயரான நெஹ்ராவும் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோல் புதிய பிளேயர்களான ஷ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜ் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
நெஹ்ரா விளையாடும் கடைசி ஐசிசி ஆட்டம்
நவம்பர் 1ம் தேதி நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான இந்த டி-20 போட்டியே நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் இருந்து அவர் அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெறுகிறார். இந்த கடைசி சர்வதேச போட்டியில் அவர் இந்திய கேப்டன் கோஹ்லியின் தலைமையின் கீழ் அவரது சொந்த மண்ணான டெல்லியில் விளையாடுகிறார். இது குறித்து ஏற்கனவே அவர் மிகவும் உணர்ச்சிகரமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெஹ்ராவிற்கு பிசிசிஐ ஃபேர்வெல்
இந்த நிலையில் நெஹ்ராவின் கடைசி மேட்ச்சில் அவர் விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்வுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.கே பிரசாத் பேசிய போது "நெஹ்ரா நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்று எந்தவிதமான உறுதியும் எங்களால் தரமுடியாது. அது கடைசி நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்'' என்று கூறினார். இதையடுத்து அவரது ஃபேர்வெல் போட்டி குறித்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் வீரர் கவாஸ்கர் கண்டனம்
இந்த நிலையில் தேர்வு கமிட்டியின் இந்த குழப்பமான பேச்சுக்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது "நெஹ்ரா மிகவும் அதிக அனுபவம் கொண்ட பிளேயர். அவர் ஆடும் கடைசி போட்டி அவரது சொந்த மண்ணில் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அவரை அவரது மக்களுக்கு முன்பு சரியாக விளையாட விடுவதே நியாயம். தேர்வு கமிட்டி கடைசி நேரத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அவரை விளையாட அனுமதிக்க வேண்டும்'' என்று கூறினார்.