ஆசிஷ் நெஹராவின் முழங்காலில் ஆபரேஷன்.. லண்டனில் நடந்தது!
டெல்லி: இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹராவின் முழங்காலில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்துள்ளது. லண்டனில் இந்த ஆபரேஷன் நடந்தது.
ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டிருந்த நெஹராவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போட்டித் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெஹரா லண்டன் விரைந்தார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. நெஹரா நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 வயதான நெஹா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் சற்று தீவிரமாக இருந்ததைத் தொடர்ந்து அவரை லண்டன் அழைத்துச் சென்று ஆபரேஷன் செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி அவர் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நெஹராவுக்கு நடந்த ஆபரேஷன் குறித்து முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மென்டாருமான விவிஎஸ் லட்சுமண் டிவிட்டரில் கூறுகையில், நெஹரா ஜி தற்போது நலமாக இருக்கிறார். அவருக்கு லண்டனில் நேற்று இரவு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வந்தார் நெஹரா. 8 போட்டிகளில் 9 விக்கெட்களைச் சாய்த்திருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போதுதான் அவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது.
வார்னர் தலைமையிலான ஹைராபாத் அணி இன்று டெல்லியில் நடைபெறும் எலிமினேட்டர் பிரிவு போட்டியில் வலிமை வாய்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சந்திக்கிறது. இதில் தோற்றால் போட்டித் தொடரை விட்டு அந்த அணி விலக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications