நாங்க தேடிட்டிருக்கிற அவர் ஏன் அஸ்வினா இருக்கக் கூடாது.. கொக்கி போடும் கோஹ்லி
சென்னை: இந்தியாவைப் பொறுத்தவரை 100 சதவீத ஆல் ரவுண்டர் என்று யாரும் இல்லை. அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் 40 என்ற சராசரியை வைத்துள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய முடியும் என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
மேலும் இலங்கைத் தொடரில் அஸ்வின் தலைமையிலான சுழற்பந்து வீச்சாளர்களையே அதிகம் நம்பியிருக்கப் போவதாகவும் கோஹ்லி கூறுகிறார்.
அஸ்வினால் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருக்க முடியும் என்றும் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இதுகுறித்து கோஹ்லி அளித்துள்ள பேட்டி...

நல்ல பேட்ஸ்மேன் + பந்து வீச்சாளர்
அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஹர்பஜன் சிங் ஆகியோர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். அதிலும் அஸ்வின் இவர்களில் சிறந்த பேட்ஸ்மேன்.

செம சராசரி
அஸ்வினின் டெஸ்ட் சராசரி 40 என்ற அளவில் உள்ளது. இது சிறப்பானது. எனவே நாம் தேடிக் கொண்டிருக்கும் ஆல் ரவுண்டர் அவராக இருக்கலாம். அதுதான் சவாலானது.

லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்தால்
அஸ்வின் தனது பேட்டிங்கில் சில பல குறைகளை சரி செய்து விட்டால் சிறந்த ஆல் ரவுண்டராக மிளிர முடியும். அணிக்குத் தேவைப்படும் முன்னேற்றத்தையும் அவரால் கொடுக்க முடியும்.

5 பவுலர்கள்..
இலங்கை டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 5 பந்து வீச்சாளர்கள், 6 பேட்ஸ்மேன்களுடன் விளையாடும். அதுதான் சரியான கலவையாக இருக்க முடியும். 20 விக்கெட்களை வீழ்த்த திட்டமிடல் அவசியம்.

ஸ்பின்னர்களே ஸ்பின்னர்களே
இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடவும் வாய்ப்புள்ளது. காரணம், இலங்கை பிட்ச்சில் ஸ்பின் அதிகம் எடுபடும். எனவே அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதுதான் சரியான களம்
வங்கதேசத்தில் நாம் அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. எனவே இலங்கைதான் நமது திட்டமிடல்களை சரியாக செய்யும் சரியான களமாக அமைந்துள்ளது.

சந்தோஷமா இருக்கேன்
டெஸ்ட் கேப்டனாக முழுமையான தொடரில் ஆடவிருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நிச்சயம் சிறப்பான ரிசல்ட்டுக்கு முயற்சிப்போம் என்றார் கோஹ்லி.


Click it and Unblock the Notifications