சிறந்த வீரர் அஸ்வின்
ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த வீரர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் ஐபிஎல் தொடரில் 2009இல் இருந்தே ஆடி வந்தார். அந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டும் ஆடிய அவர் அதன் பின் உள்ளூர் போட்டிகளில் ஆடி கவனம் ஈர்த்தார்.
2010 ஐபிஎல் ஆடிய அஸ்வின்
அடுத்து 2010 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை போட்டிகளில் பயன்படுத்தியது. முதலில் சில போட்டிகளில் ஆடியவர் இடையே திடீரென அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் பற்றி அஸ்வின் தற்போது பல உண்மைகளை கூறி உள்ளார்.
அஸ்வினை நீக்கியது சிஎஸ்கே
2010 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் அதன் பின் சரியாக செயல்படவில்லை. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் மோசமாக ஆடியதை அடுத்து அவரை அணியை விட்டு நீக்கியது சிஎஸ்கே.
தவறான எண்ணம்
அந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட அஸ்வின் அது, "பாஸ்.. நீ இந்த இடத்துக்கே சம்பந்தம் இல்லாதவன்" என கூறியது போல் இருந்ததாக குறிப்பிட்டார். மேலும், அப்போது டி20 போட்டிகளில் பந்து வீசுவது முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வீசுவது போலத் தான் என தான் நினைத்து இருந்ததாக குறிப்பிட்டார்.
4 ஓவர்களில் 40 ரன்கள்
இந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் ராபின் உத்தப்பா, மார்க் பவுச்சர் அஸ்வின் ஓவரில் சரமாரியாக அடித்து ரன் எடுத்தனர். அஸ்வின் 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து இருந்தார். அது பற்றி கூறுகையில், "ராபின் உத்தப்பா, மார்க் பவுச்சர் எனக்கு கடுமையாக பாடம் நடத்தினர். பெங்களூர் அணிக்கு நான் 14, 16, 18 மற்றும் 20வது ஓவரை வீசினேன். எனக்குள் இருந்த இளைஞன் அதை சவாலாக பார்க்கவில்லை. அது விக்கெட் எடுக்க கிடைத்த வாய்ப்பாக பார்த்தேன்" என்றார் அஸ்வின்.
ஓங்கி அறைந்த சிஎஸ்கே
"நான் விக்கெட் எடுக்கவில்லை. மாறாக 40 அல்லது 45 ரன்கள் விட்டுக் கொடுத்தேன். என் அணியை சிக்கலில் சிக்க வைத்தேன். அடுத்த போட்டி சூப்பர் ஓவர் சென்று அதில் தோற்றோம். நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அது ஓங்கி அறைந்தது போல இருந்தது" என்றார் அஸ்வின்.
ஹோட்டலில் அறை இல்லை
அப்போது 2010 காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் அணியில் இடம் பெறும் வரிசையில் முதல் 18 இடங்களில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே ஹோட்டலில் அறை அளிக்கப்படும். மற்ற வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியது தான். அஸ்வினும் அப்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஹோட்டலை காலி செய்து…
"நான் நீக்கப்பட்டேன். ஹோட்டலை காலி செய்து விட்டு, வீட்டில் வந்து அமர்ந்து இருந்தேன். எனக்கு இன்னும் வாய்ப்பு அளித்திருக்கலாம் என தோன்றியது. அப்போது நான் 2010 டி20 உலகக்கோப்பைக்கான 30 வீரர்கள் குழுவில் நான் இருந்தேன்." என்றார் அஸ்வின்.
இரண்டு மோசமான போட்டிகள்
"அப்போது சிஎஸ்கே அணி என்னை ஏன் ஆதரிக்கவில்லை என நான் நினைத்தேன். நான் முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக ஆடி இருந்தேன். வெறும் இரண்டு மோசமான போட்டிகள் ஆடினேன். யார் வேண்டுமானாலும் இது போல இரண்டு போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பார்கள்" என தன் பக்க நியாயத்தை கூறினார் அஸ்வின்.
பிளெம்மிங்குடன் பிரச்சனை
"உண்மையில், அப்போது ஸ்டீபன் பிளெம்மிங்குடன் எனக்கு பிரச்சனை இருந்தது. அதனால், அவர் என்னுடன் பேசவில்லை. அவர் மீது எனக்கு பெரும் மரியாதை இருந்தது. ஆனால், அவர் என்னுடன் பேசவில்லை." என பிளெம்மிங் உடன் இருந்த பிரச்சனையை பற்றி கூறினார்.
சத்தியம் செய்தேன்
"அதனால் நான் வீட்டில் அமர்ந்து சிஎஸ்கே போட்டிகளை பார்த்துக் கொண்டு, என் தலையில் நானே சத்தியம் செய்து, ஒருநாள் இந்த நிலையை மாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டேன்." என்றார் அஸ்வின். அந்த தொடரில் அதன் பின் மீண்டும் சிஎஸ்கே அணியில் ஆடிய அஸ்வின் 12 போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.