பெரிதான பிரச்சனை
இடை நீக்கம் செய்யப்பட்ட ராகுல், பண்டியா இருவரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் விசாரணை அதிகாரி எடுக்கும் முடிவு வரை எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது என கூறப்பட்டது. முன்னாள் வீரர்கள் பலரும், சாதாரண பிரச்சனையை பெரிதாக்கி விட்டதாக கருத்து தெரிவித்தனர்.
வாய்ப்பு பறிபோனது
மேலும், சில போட்டிகள் தடை என முடிவு செய்து இருந்தால் கூட இந்நேரம் இருவரும் மீண்டும் அணியில் இணைந்திருக்க முடியும். ஆனால், விசாரணை முடியும் வரை இடை நீக்கம் என்ற முடிவால் ஏற்கனவே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆடும் வாய்ப்பையும் இழந்துள்ளனர்.
இடியாப்ப சிக்கலாக மாறியது
விசாரணை அதிகாரியை நேரடியாக நியமிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இருக்கும் பிசிசிஐ-க்கு இல்லாததால், அதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது பிசிசிஐ. இதனால், எளிதாக முடிய வேண்டிய விஷயம், இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது.
தற்காலிகமாக முடிவு
இந்த நிர்வாக குழப்பத்தில் இளம் வீரர்களின் வாய்ப்புகள் பறிபோய் இருப்பதால், கடும் விமர்சனம் எழுந்தது. இதை அடுத்து, பிசிசிஐ தற்காலிகமாக இந்த தடையை நீக்கியுள்ளது. இதையடுத்து கடந்த ஜனவரி 11 முதல் இடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த பண்டியா, ராகுல் மீதான இடை நீக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
பண்டியாவிற்கு வாய்ப்பு
ராகுல் ஏற்கனவே பார்ம் அவுட்டில் தான் இருக்கிறார். ஆனால், ஹர்திக் பண்டியா அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதால், அவர் நியூசிலாந்து தொடரில் பாதியில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
டி20 தொடரில் வாய்ப்பா?
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ளன. அது முடிந்த உடன் டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளில் பண்டியா பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. எனினும், டி20 தொடரில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.