ஒருவழியா மனசு வந்தாச்சு! 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகள்.. பிசிசிஐ அறிவிப்பு
மும்பை: கொரோனா பேரிடர் காலத்தில் உதவும் விதமாக, 2000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்குவதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா 2வது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக உள்ளது. தினம் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட, ஆயிரக்கணக்கானோர் இறந்து வருகின்றனர். குறிப்பாக, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக பலரும் இறப்பது உச்சக்கட்ட கொடுமை.
இந்த சூழலில், கொரோனா காரணமாக ஐபிஎல் தொடங்கி ஆசிய கோப்பை தொடர் வரை அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

கங்குலி அறிவிப்பு
இந்நிலையில், நாட்டின் போராட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக, 10 லிட்டர் வீதம் 2000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பி.சி.சி.ஐ வழங்குவதாக அதன் தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வைரஸுக்கு எதிரான இந்த நீண்ட போரில் நாம் போராடுகையில், மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை வழங்கி வரும் அபார சேவையை பிசிசிஐ எண்ணிப் பார்க்கிறது. அவர்கள் உண்மையிலேயே முன்களப் பணியாளர்களாக இருந்து நம்மை பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார்கள். பிசிசிஐ எப்போதும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பேணுவதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது. இதற்காக பிசிசிஐ வழங்கும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும். விரைவாக மீட்கவும் உதவும்" என்றார்.

நிச்சயம் மீள முடியும்
பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "வைரஸுக்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம். இந்த நெருக்கடி நேரத்தில் மருத்துவ உபகரணங்களின் தேவையை பிசிசிஐ புரிந்துகொள்கிறது, மேலும் எங்களது இந்த முயற்சி தேவையின் இடைவெளியைக் குறைக்க உதவும் என்று நம்புகிறது. நாம் அனைவரும் நிறைய விஷயங்களைச் சந்தித்திருக்கிறோம், ஆனால் தடுப்பூசி போடப்பட்டு வருவதால், நிச்சயம் மீள முடியும் என்று நான் நம்புகிறேன். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

பி.சி.சி.ஐ உறுதி
" பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் சிங் துமல் கூறுகையில், "நெருக்கடி காலங்களில், கிரிக்கெட் சமூகம் எப்போதுமே ஆதரவளிக்க முன்வந்துள்ளது. எல்லோரும் ஒன்றிணைந்து தங்கள் பங்கைச் செய்வதைப் பார்க்கும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. சமூக பொறுப்புணர்வுக்கான அதன் முயற்சிகளில் பி.சி.சி.ஐ உறுதியுடன் உள்ளது. மேலும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் உதவ மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுடன் எப்போதும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்கும். இந்த முக்கியமான நேரத்தில் ஆக்ஸிஜனை வழங்குவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வேறென்ன சொல்ல
நாட்டின் தினசரி பாதிப்பு நான்கு லட்சங்களை கடந்து அனைவரும் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டம் கடந்து, இப்போது தினசரி பாதிப்பு இரண்டரை லட்சம் என்று குறைந்திருக்கும் நேரத்தில், கண்களை திறந்து உதவ முன்வந்திருக்கிறது பிசிசிஐ அமைப்பு. அட்லீஸ்ட், இப்போதாவது உதவி செய்திருக்கிறதே என்பதைத் தவிர வேறென்ன சொல்ல.


Click it and Unblock the Notifications