லண்டன் : பென் ஸ்டோக்ஸ் மீது இருந்த தாக்குதல் வழக்கு அவருக்கு சாதகமாக முடிந்தது. கடந்த வாரம் நடைபெற்ற நீதிமன்ற விசாரணை நேற்று முடிவுக்கு வந்தது. அதில் அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என தீர்ப்பு கொடுக்கப்பட்டது. தீர்ப்பு வந்த உடன் அவரது பெயர் மூன்றாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டது.
கடந்த வருடம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியைக் கொண்டாட கிளப்புக்கு சென்று மது அருந்திவிட்டு வந்துள்ளார். இவருடன் மற்றொரு கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் சிலர் இருந்துள்ளனர். அப்போது ஒரு நபரை கடுமையாக தாக்கி பெரிய அளவில் காயம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இந்த வழக்கின் காரணமாக, இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸ்-ஐ சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலக்கி வைத்தது. குறிப்பாக, ஆஷஸ் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்தார். மொத்தத்தில், 5 டெஸ்ட் போட்டிகள், 7 ஒருநாள் போட்டிகள், 4 டி20 போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.
எனினும், பின் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, தான் குற்றமற்றவர் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து அணியில் இடம் பெற்றார்.
தற்போது, வழக்கு விசாரணை காரணமாக இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. விசாரணையில் குற்றமற்றவர் என கூறப்பட்டுள்ளதால், உடனடியாக மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், களத்தில் ஆடுவாரா என்பது தெரியவில்லை.
அதே போல, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தன் ஒழுக்க விதிகளுக்கு உட்பட்ட அளவில் விசாரணை நடத்தும் என தெரிகிறது. எனினும், அவர் இனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க எந்த தடையும் இல்லை.
இரண்டாவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் இடத்திற்கு வந்த கிறிஸ் வோக்ஸ் சதம் அடித்துள்ளதால், அணித் தேர்விலும் சிறிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் இருவருமே ஆல்-ரவுண்டர்கள் என்பதால் இருவரையும் ஆட வைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.