2018 ஐபிஎல் எங்கள் கையில்.. கண்டிப்பாக சூதாட்டம் நடக்கும்.. சூதாட்ட கும்பல் பகீர் தகவல்
டெல்லி: 2018 ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடக்கும் என்று இந்தியாவை சேர்ந்த இரண்டு சூதாட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய சூதாட்ட உலகில் முக்கிய நபர்களாக இருக்கும் சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா ஆகியோர் தனியார் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிடம் இந்த உண்மையை கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரில் சூதாட்டம் நடக்க போவதாக கூறியிருந்த இவர்கள் தற்போது ஐபிஎல் போட்டி குறித்தும் கூறியுள்ளனர். மேலும் இந்த சூதாட்டத்திற்காக எல்லா விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதாக பேசியுள்ளனர்.
மேலும் இதுவரை எத்தனை ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் செய்யபட்டு இருக்கிறது, எவ்வளவு பணம் இதில் கை மாறி இருக்கிறது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் பேசுவது அனைத்தும் அவர்களுக்கு தெரியாமல் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

சூதாட்டம்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடரில் சூதாட்டம் நடக்க போவதாக இந்தியாவை சேர்ந்த சூதாட்ட கும்பல் பேட்டி அளித்து இருக்கிறது. சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா என்ற சூதாட்ட முதலைகள் இந்த பேட்டியை அளித்துள்ளனர். அதே சமயத்தில் 2018ல் நடக்கும் ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஏற்கனவே நிறைய கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

என்ன செய்வார்கள்
இந்த சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா இருவரும்தான் இந்திய சூதாட்ட உலகில் முக்கிய தலைகள். இவர்களிடத்தில் தான் சூதாட்டம் செய்ய விரும்பும் அனைவரும் வியாபாரம் செய்வார்கள். ஐபிஎல் போட்டியில் இவர்கள் சில வீரர்களை விலைக்கு வாங்கி உள்ளனர். வீரர்கள் குறித்த தகவலை சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா இருவரும் சில தொழில் அதிபர்களிடம் தெரிவிப்பார்கள். அதை வைத்து தொழில் அதிபர்கள் அந்த சூதாட்ட வீரர்கள் மீது பணம் காட்டுவார்கள்.

பணம் எவ்வளவு புரளுகிறது
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் கோடிக்கணக்கில் பணம் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு போட்டியில் 10 லட்சத்தில் இருந்து 7 கோடி வரை பணம் கைமாறும் என்று கூறியுள்ளனர். ஐபிஎல் போட்டி வந்த பின் ஒரு வீரர் மீது கூட சாதாரணமாக 10 கோடி வரை பணம் கட்டப்பட்டு சூதாட்டம் நடைபெறுவதாக கூறியுள்ளனர். மேலும் இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய மார்க்கெட் என்றும், இதை தவிர வேறு எதிலும் பணம் அதிகமாக கைமாறவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஐபிஎல் தான் மூலம்
இந்த சூதாட்டங்களுக்கு ஐபிஎல் தான் மூலம் என்று இவர்கள் கூறியுள்ளனர். முதலில் சிறிய அளவில் நடந்த சூதாட்டம் ஐபிஎல் மூலம் பெரிய சந்தையாக மாறியிருக்கிறது. ஐபிஎல் மூலம் இந்திய வீரர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வீரர்கள் தொடர்பும் சூதாட்ட கும்பலுக்கு கிடைத்து இருக்கிறது. மேலும் இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் டி-20 போட்டியிலும் சூதாட்டம் நடைபெற்று உள்ளது.

வீரர்கள் யார்
இந்திய அணியின் 2011 உலகக் கோப்பை அணியில் ஆடிய முக்கியமான வீரர் ஒருவர் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் மட்டும் 18 போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளது. இந்திய வீரர்கள் மட்டும் இல்லாமல் சிறிய அணியை சேர்ந்த வீரர்களும் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பொதுவாக முதல் போட்டி மற்றும் இறுதி போட்டியை தவிர மற்ற போட்டிகளில் சூதாட்டம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

2018ல் நடக்கும்
2018ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் செய்ய இப்போதே அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சில வீரர்கள் இப்போதே வாங்கப்பட்டு இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் இருக்கும் தொழிலதிபர் ஒருவரும் இந்தியாவில் இருக்கும் 'பெரிய மனிதர்' ஒருவரும் இந்த வீரர்களை இப்போதே வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் 2018 எங்கள் கையில் என்று சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications