ஒர்க் அவுட்டாகாத பிளான்
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி அடுத்தடுத்தது விக்கெட்டுகளை இழந்தது. முதலில் ரோஹித் ஷர்மா, க்றிஸ் வோக்ஸின் ஒரு சாதாரண வெளியே சென்ற ஷாட் பிட்ச் பந்தில் எட்ஜ் ஆகி 11 ரன்களில் வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதில், ஒரு சர்பிரைஸ் மூவ் என்னெவெனில், வழக்கமாக நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கும் ரஹானேவுக்கு பதில், 7வது டவுனில் களமிறங்கவிருந்த ஜடேஜாவை களமிறக்கியது இந்திய அணி. ஆனால், அதனால் எந்த பலனும் இல்லை. ஜடேஜா 10 ரன்களில் வெளியேறினார்.
விரைவில் அவுட்
இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். ரஹானேவும் ஏற்கனவே அவுட்டாகி இருக்க வேண்டியது. க்றிஸ் வோக்ஸ் ஓவரில், ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் இருந்த போது, ஒரு அபார பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. ஆனால், ரஹானே சந்தேகத்துடன் ரிவ்யூ செல்ல, ஸ்டெம்புகளுக்கு மேலே பைல்ஸை உரசிக் கொண்டு செல்வது போல் இருந்தது. இதனால், அவுட் கண்டத்தில் இருந்து ரஹானே தப்பித்தார். அதேபோல், விராட் கோலி 22 ரன்கள் எடுத்திருந்த போது, க்றிஸ் வோக்ஸ் பந்தில் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்றிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தவறவிட்டார். இத்தனைக்கு அது ஒரு சாதாரண கேட்ச் தான். லேட் மூவ்மெண்ட் காரணமாக, ரூட் அதனை தவறவிட்டதன் பயன், கோலிக்கு அரைசதம் அடிக்கும் ஜாக்பாட் அடித்தது. ஆனால், அந்த அரைசதத்தை கன்வெர்ட் செய்து சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், "போதும் கண்ணா" மோடில் உடனே வெளியேறிவிட்டார்.
23,000 ரன்கள் சாதனை
இந்த டெஸ்ட் தொடரில், ஆண்டர்சனிடம் இரண்டு முறை அவுட்டான விராட் கோலி, ஓலே ராபின்சனிடம் இன்று மூன்றாவது முறையாக வீழ்ந்துள்ளார். எனினும், இந்திய அணிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் என்னவெனில், சர்வதேச கிரிக்கெட்டில், 23,000 ரன்களை எட்டிய அதிவேகமான வீரர் எனும் சாதனையை கோலி இன்றி நிகழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் நீண்டகால சாதனையை கோஹ்லி வெறும் 490 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார். சச்சின் 522 இன்னிங்ஸ்களில் 23,000 ரன்களை எட்டினார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். அவர், 544 இன்னிங்ஸ்களில் 23000 சர்வதேச ரன்கள் எடுத்தார்.
பந்து வீசிய ஆண்டர்சன்
இது ஒருபுறமிருக்க, ஆண்டர்சனின் அர்ப்பணிப்பு தான் இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆண்டர்சன் பந்து வீசிய போது, அவரது கால் முட்டியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதன்புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட இப்போது அது வைரலாகியுள்ளது. ஆனால், எப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. அவரது வலது கால் முட்டிப் பகுதியில் இருந்து இரத்தம் கசிவது புகைப்படங்களில் பதிவாகியுள்ளது. ஆனால், அதற்குள் இந்த படங்கள் இணையத்தில் ஷேர் செய்யப்பட, ரசிகர்கள் ஆஹா, ஓஹோ.. என்ன ஒரு டெடிகேஷன் என்று பாராட்டித் தள்ளி வருகின்றனர். அதற்கேற்றாற் போல், அவரும் அந்த இரத்த காயங்களுடன் தொடர்ந்து பந்து வீசி வருகிறார். அதேசமயம், நம்ம மைண்ட் வாய்ஸோ, "நல்லா பாருங்கப்பா.. அது தக்காளி சட்னியா இருக்கப் போவுது" என்று முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது.