இதுக்குத்தான் காத்திருந்தேன்.. சென்னை மக்களுக்கு சமர்பிக்கிறேன்.. 'காலா' பிராவோவின் சென்டிமென்ட்!
மும்பை: நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற பிராவோ, அதை சென்னை அணியின் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடந்த மும்பைக்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் பிராவோ அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பிராவோ சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கடைசி நேரத்தில் ஆட்டம் இப்படி திசை மாறும் என்று சென்னை வீரர்கள் கூட நினைக்கவில்லை. இந்த போட்டி சென்னை அணிக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

மோசம்
நேற்று சென்னையின் அணியின் பேட்டிங் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதனால் ஆட்டம் பாதியில் சிஎஸ்கேவின் கைவிட்டு போனது. வரிசையாக ரெய்னா, டோணி , ஜடேஜா என்று எல்லோரும் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். முதல் போட்டியில் மும்பைக்குத்தான் வெற்றி என்று கூட முடிவு செய்துவிட்டார்கள்.

பிராவோ சிங்கம்
ஆனால் பிராவோ வந்ததும் போட்டியின் திசையை மாற்றினார். வரிசையாக சிக்ஸ் அடித்துக் கொண்டு வந்த பிராவோ 7 சிக்ஸ் 3 பவுண்டரியுடன் 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இவர் அடித்த இந்த 68 ரன்கள்தான் சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.

ஆசை
இதன்பின் பேட்டியளித்த பிராவோ "இந்த வெற்றி என்னால் மட்டும் சாத்தியமாகவில்லை. இது ஒரு குழு வெற்றி. சென்னை வீரர்கள் எல்லோருக்கும் இதில் பங்கு இருக்கிறது. இப்படி அதிரடியாக ஆட வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டம் போட்டு இருந்தேன். அது இன்று நடந்துவிட்டது. இந்த இரவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது'' என்றுள்ளார்.

ரசிகர்கள்
மேலும் ''இந்த வெற்றியை நான் சென்னை ரசிகர்களுக்கு சமர்பிக்க விரும்புகிறேன். அவர்கள்தான் இரண்டு வருடமாக இப்படி ஒரு வெற்றிக்கு காத்து இருந்தது. சென்னை மக்களுக்குத்தான் இந்த வெற்றி சேரும். சிஎஸ்கே அணி என்னை அதிகம் நம்பியது, அதற்காக இப்படி ஆடினேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications