போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டர் டிவைன் பிராவோ டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் பிராவோ தேர்வு செய்யப்படவில்லை. இதனால் கிளைவ் லாய்ட் உள்ளிட்டோர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த 4 ஆண்டுகளாக அந்த அணியில் பிராவோ தேர்வு செய்யப்படவில்லை. இதனை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்துள்ளார்.
தமது ஓய்வு குறித்து கூறிய பிராவோ, நான் சில ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகளுக்காக உற்சாகமாக விளையாடி வந்தேன். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ரசிகர்களையும் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறேன் என்ற ஆழமான உணர்வில் நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தேன்.
எங்கள் அனைவருக்கும் இது கடினமான காலம் என்பதை நான் அறிவேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றார்.
40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ 2,200 ரன்களை 31 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் அடங்கும்.
2005-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் எடுத்த 113 ரன்கள் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. 86 டெஸ்ட் விக்கெட்டுகளையும் இவர் கைப்பற்றியுள்ளார்.
இவரது அபார பந்து வீச்சு மற்றும் பின்னால் களமிறங்கி ஆடும் முக்கியமான பேட்டிங் இன்னிங்ஸ்கள், அனைத்தையும் விட அபாரமான பீல்டிங்கிற்காக எப்போதும் இவரை நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக உற்சாகத்துடன் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது