பெங்களூர்: விருதிமான் சாஹா ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்று டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.
மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நிருபர்களிடம் கோஹ்லி கூறியதாவது: அணிக்கு தேவையான வகையில் ஆடுவதில் சாஹா கெட்டிக்காரர். அணிக்காக முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடக்கூடிய கடினமான உழைப்பாளி.
முதல்தர கிரிக்கெட்டில் நிறைய ரன்களை குவித்துதான், இந்திய அணியில் சாஹா இடம் பிடித்துள்ளார். அணி இக்கட்டில் சிக்கியிருக்கும்போது கைகொடுத்து உதவ பெரிதும் உழைப்பவர் சாஹா. 6வது, 7வது வரிசையில் களமிறங்கி கடைசி கட்டத்தில் அணியை காப்பவர் சாஹா.
சிட்னி டெஸ்ட் போட்டியில்கூட, ஆஸ்திரேலிய வேகப்பந்தை லாவகமாக சமாளித்து அணிக்காக போராடினார். சாஹா தன்மீது தக்க தன்னம்பிக்கை வைத்துள்ளார். அதுதான் அவரது ஆட்டத்தில் வெளிப்படுகிறது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மொகாலி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில், கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுபோல சரிந்தபோது, முட்டுக்கொடுத்து, இந்திய அணி 200 ரன்களை எட்ட செய்தார் சாஹா. அப்போட்டியில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டிசம்பரில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து மேற்கு வங்கத்தை சேர்ந்த சாஹா டெஸ்ட் போட்டிகளுக்கான விக்கெட் கீப்பராக களம் கண்டுள்ளார். 9 டெஸ்ட் போட்டிகளில் இரு அரை சதங்களை கடந்துள்ளார்.