வெலிங்டன்: உலக கோப்பையின் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் அணிகள் நாளை பலப்பரிட்சை நடத்துகின்றன.
ஜிம்பாப்வே தனது முதல் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும், அந்த அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததை பார்க்க முடிந்தது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவே ஜிம்பாப்வே 277 ரன்களை குவித்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம் அரபு எமிரேட்டுக்கு இதுதான் முதல் போட்டியாகும். நியூசிலாந்தின் சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில், இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
ஜிம்ப்வே கேப்டன் எல்டன் சிக்கும்புரா நிருபர்களிடம் கூறுகையில், "தயவு தாட்சண்யமின்றி அரபு எமிரேட்டை அடித்து நொறுக்க முயற்சி செய்வோம். இந்த போட்டியை மிகுந்த முக்கியத்துவமாக கருதுகிறோம். வெற்றிபெற தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டோம்" என்றார்.
இதுகுறித்து யூஏஇ அணி கேப்டன் முகமது தாக்விர் கூறுகையில், "ஆசிய அணிகள், ஆங்கில அணிகள் கிரிக்கெட் விளையாடிதான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். வளைகுடா நாட்டை சேர்ந்த அணியான நாங்கள் சிறப்பாக விளையாடினால், அது எமிரேட் நாடுகளில் கிரிக்கெட் ரசனையை தூண்ட உதவும். இந்த உலக கோப்பையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்து பெற்ற 2 அணிகளையாவது வெல்ல வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்" என்றார்.