சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடுவதற்காக பைசலாபாத் உல்ப்ஸ் அணி வந்துள்ளது. முதலில் இந்த அணிக்கு விசா தர முடியாது என்று மத்திய அரசு நிராகரித்திருந்தது. இருப்பினும் தற்போது மொஹாலி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக மட்டும் விசா தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பைசலாபாத் அணி வீரர்கள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தலைமையில் இந்தியா வந்தனர். சண்டிகரில் உள்ள ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்கள் அனைவரும் ஹோட்டலை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அனைவரும் ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்து மொஹாலி மைதானத்தில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கிளப்ஹவுஸுக்கு அனைவரும் மாற்றப்பட்னர்.
இதுகுறித்து பஞ்சாப் கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ஜி.எஸ்.வாலியா கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் பேசிக் கொண்டிருக்கிறது. சண்டிகருக்கும் இவர்களுக்கு விசாவை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் என்று நம்புகிறோம். அதன் பின்னர் அனைவரும் சண்டிகர் ஹோட்டலுக்கு மாற்றப்படுவர் என்றார்.
பைசலாபாத் உல்ப்ஸ் அணியின் பயிற்சியாளர் நவீத் அஞ்சும் கூறுகையில், சில பிரச்சினைகள் விசா தொடர்பாக உள்ளன. அவை சரி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.
இன்று பைசலாபாத் அணி தனது பயிற்சிப் போட்டியில் விளையாடுவதாக இருந்தது. இந்தப் போட்டி சண்டிகரில் நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது விசா பிரச்சினை எழுந்துள்ளதால் போட்டி நடக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் தொரில் பங்கேற்பதற்காக ஏற்கனவே சன் ரைசர்ஸ் ஹைதராபாத், இலங்கையின் கண்டுரதா மரூன்ஸ் அணிகள் சண்டிகர் வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
குவாலிபயர் போட்டிகளில் இந்த இரண்டு அணிகளையும், நியூசிலாந்தின் ஓடகோ அணியையும் பைசலாபாத் அணி சந்திக்கவுள்ளது.