பாதிப்பு
இந்த நிலையில், ஜப்பானில் நடக்க இருக்கும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் இத்தாலியில் வழக்கமாக நடைபெறும் பல விளையாட்டுத் தொடர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் விளையாட்டு அமைப்புகளுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய அரசு கூறி உள்ளது.
பரவிய வைரஸ்
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் முதல் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. கடந்த ஜனவரி மாதம் பரவத் துவங்கிய அந்த வைரஸ் குறித்து சற்று தாமதமாகவே கவனித்தது சீன அரசு. அதற்குள் அந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவத் துவங்கியது.
தென் கொரியாவில் பரவியது
சுமார் 90,000 பேர் வரை சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. சீனாவை அடுத்து தென் கொரியாவில் சுமார் 5000 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் தான் இந்த வைரஸ் வேகமாக பரவுவதாக கொரியா கண்டறிந்துள்ளது.
இத்தாலியிலும் பாதிப்பு
சீனாவில் இருந்து அதிக தூரம் உள்ள ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது மேற்கத்திய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தாலி அரசு வைரஸ் பரவுவதை தடுக்க முடியாமல் திணறி வருகிறது.
ரசிகர்கள் வேண்டாம்
இந்த நிலையில், இத்தாலியில் நடை பெற்று வரும் பிரபல கால்பந்து தொடரான சீரி ஏ மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இல்லாத அரங்கில் நடத்த வேண்டும் என இத்தாலி நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2020 டோக்கியோ ஒலிம்பிக்
அதே போல 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? என்பதில் சந்தேகம் உள்ளது. அந்த நாட்டின் ஒலிம்பிக் அமைச்சர் செய்க்கோ ஹஷிமோட்டோ, ஒலிம்பிக் போட்டிகளை ரத்து அல்லது தள்ளிப் போடுவது வீரர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என கூறி உள்ளார்.
சிறிய விழா
இந்த நிலையில், கிரீஸ் நாட்டில் நடைபெற இருக்கும் 2020 ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் விழா மிக சுருக்கமாக, அதிக மக்கள் இன்றி நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளும் மக்கள் யாருமின்றி நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் விளையாட்டுப் போட்டிகளை மாற்றி அமைத்தும், கட்டுப்படுத்தியும் வரும் நிலையில், இந்திய அரசு இந்தியாவில் இருக்கும் அரசின் பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் வீரர்களின் உடல்நலம் தான் முக்கியம் என்பதால், வெளிநாட்டு தொடர்கள் மற்றும் பய்ற்சிகளின் போது அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி கூறி உள்ளது.