கரீபியன் பிரீமியர் லீக்
2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் ட்ரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டில் நடைபெற்று வருகிறது. அதில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று ஆடு வருகின்றனர். ஐபிஎல் தொடருக்கு முன் நடக்கும் டி20 தொடர் என்பதால் இந்த தொடருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள்
இந்த தொடரில் ஆடும் ஐபிஎல் வீரர்களை ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். மற்ற ஐபிஎல் வீரர்கள் கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய பயிற்சி இன்றி இருக்கும் நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடும் வீரர்கள் பயிற்சியுடன் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளனர்.
ஆண்ட்ரே ரஸ்ஸல்
கடந்த சீசனில் ஐபிஎல் தொடரில் கலக்கிய அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரஸ்ஸல், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்கா தலவாஸ் என்ற அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். அவர் இந்த தொடரில் அதிரடியை காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இரண்டு போட்டிகளில்..
இந்த நிலையில் முதல் போட்டியில் ரஸ்ஸல் 17 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்த போட்டியில் 26 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் போட்டியில் வென்ற அவரது அணி, இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது.
சிக்ஸர் அடிக்கவில்லை
அந்த தோல்விக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் முக்கிய காரணமாக அமைந்தார். இரண்டு போட்டிகளிலும் அவர் சிக்ஸர் அடிக்கவில்லை. அவரது பலமே எளிதாக சிக்ஸர் அடிப்பது தான். எனினும், அவரால் பந்தை சரியாக கணித்து ஆட முடியவில்லை.
அதிரடி ஆட்டம்
இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆடிய போது அதிரடி ஆட்டம் ஆடினார், சிக்ஸர் அடித்தார். ஆனாலும், 12 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் சொதப்பினார். அதைக் கண்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
என்ன நடந்தது?
முதலில் ஆடிய அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை சேஸிங் செய்த ஜமைக்கா அணி 59 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்தது. 4 ஓவர்களில் 60 ரன்கள் தேவை என்ற நிலை.
சாமர்த்தியமான ஆட்டம்
களத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருந்தார். அவர் சாமர்த்தியமாக ஓவர் முடிவில் ஒரு ரன் ஓடி, அடுத்த 3 ஓவர்களின் 18 பந்துகளையும் ஆடினார். அதிரடியாக ரன் குவித்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் எட்வர்ட்ஸ் ஒரு ரன் ஓடி அடுத்த ஐந்து பந்துகளையும் ரஸ்ஸலை ஆட வைத்தார்.
நம்பிக்கை அளித்தார்
24 பந்துகளில் 60 ரன்கள் என்பது கடினம் தான். ஆனால், முதல் 12 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார் ரஸ்ஸல். அடுத்து 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 10 ரன் சேர்த்தார். அடுத்த நான்கு பந்துகளில் அவரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.
8 பந்துகளில் 1 ரன் கூட இல்லை
கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் முதல் நான்கு பந்துகளில் அவரால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் மட்டுமே சிக்ஸ் அடித்தார். தொடர்ந்து 8 பந்துகளில் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர், ஆட்ட முடிவில் 37 பந்துகளில் 52 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ரசிகர்கள் கவலை
அவரால் மட்டுமே தோல்வி என கூற முடியாவிட்டாலும் இறுதியில் அவர் பந்தை அடிக்க முடியாமல் தொடர்ந்து 8 முறை திணறியது ரசிகர்களை கவலை அடைய வைத்தது. முதல் இரண்டு போட்டிகளின் ஆட்டத்துக்கு, மூன்றாவது போட்டி பாராட்டத்தக்கது. இன்னும் ஒரீரு போட்டிகளில் ரஸ்ஸல் தன் பழைய பார்முக்கு வந்து விடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.