பரபரப்பு புகார்
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அன்ஷுல் ராஜ் என்பவர் கடந்த ஜூலை 9ம் தேதி போலீஸில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் செக்யூர் கார்ப்ரேட் மேனேஜ்மண்ட் என்ற நிறுவனத்தின் தலைவர் அஷுடோஸ் போரா என்பவர் தனக்கு பிசிசிஐயால் நடத்தப்படும் சி.கே நாயுடு தொடரில் ஹிமாச்சல பிரதேச அணிக்காக விளையாட வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் திடீர் ரெய்டு
இதனையடுத்து ஜார்ஜான் போலீசார், அந்த நிறுவனத்தில் ரெய்டு நடத்திய போது, 18 வீரர்களிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு வாய்ப்பு பெற்றுக்கொடுத்தது தெரியவந்தது. இதற்கான வாட்சப் உரையாடல்கள், பணப்பட்டுவாடா ஆதாரங்கள் சிக்கின. இந்த 18 பேரில் மேற்கு வங்கத்தின் முன்னாள் அண்டர் 19 வீரர் தனிஷ் மிஷ்ராவும் ஒருவர். இதே போல ஐபிஎல் வீரர் ஒருவரும் தொடர்பில் உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் அஷுடோஸ் போரா மற்றும் அவரது சகோதரி சித்ராவும் கைது செய்யப்பட்டனர்.
புது ஆதாரம்
இந்நிலையில் இதில் புதிய ஆதாரமும் கிடைத்தது. போராவின் வங்கி பண வர்த்தனை விவரங்களை பார்த்தபோது, டெல்லி கிரிக்கெட் வாரிய முன்னாள் கணக்காளர் சஞ்சய் பரத்வாஜ் மற்றும் அருணாச்சல பிரதேச கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் நபாம் விவேக்கிற்கும் பண வர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.
யார் என்றே தெரியாது
இதுகுறித்து ப்ரத்வாஜிடம் கேட்டபோது, அவர் எனக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாது என மறுத்துவிட்டார். நபாம் விவேக்கிடம் கேட்டபோது அவர், போரா என்பவரை நான் பார்த்ததே இல்லை. அவரின் உதவியாளர் ஒருவர் என்னிடம் மைதானம் வாடகைக்கு வேண்டும் எனக்கூறி அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் கொரோனா காரணமாக போட்டிகள் நடைபெறாததால் அந்த அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டேன் எனக்கூறி மழுப்பியுள்ளார்.
பீகார் கிரிக்கெட் வாரியம்
போலீசார் இதோடு நின்றுவிடாமல் பீகார் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் வீரர்களை எடுப்பதற்காக தான் இந்த முறைகேடுகள் நடைபெற்றதை கண்டறிந்தனர். எனவே நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைகளுக்கு பதிலளிக்க பீகார் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நீதிபதி விசாரணை
கடந்த நவம்பர் 1ம் தேதி இதுகுறித்த விசாரணையின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேரையும் நேரில் வரவழைத்து விசாரிக்க, ஜார்ஜான் துணை ஆணையர் அனுமதி பெற்றுள்ளார். பணம் பெறுவதற்காகவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளதாக போராவின் தரப்பு வாதம் நடத்தியுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை வரும் அக்டோபர் 14ம் தேதி நடைபெறவிருப்பதால் அன்று பல உண்மைகள் வெளி வரலாம் எனத்தெரிகிறது.