தம்பி என்ன பொட்டியைத் தூக்கிட்டு கோவா கிளம்பிட்டீங்க".. ப்ரித்வி ஷாவை தடுத்து நிறுத்திய போலீஸ்!
மும்பை: இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா, கோவா சுற்றுப்பயணம் செல்லும் போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் வீசும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பல வெளிநாட்டு வீரர்கள் அப்படியா மாலத்தீவு அழைத்துச் செல்லப்பட, இந்திய வீரர்கள் உடனடியாக வீடு திரும்பினர்.
கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட, அதன் பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், கொல்கத்தா அணியில் மட்டும் நான்கு வீரர்களை கொரோனா தாக்கியது.

அதுவும் கோவா
இந்த அளவுக்கு நிலைமை மோசமான இருக்கும் போது, ஜாலியாக டூர் கிளம்பி சிக்கியிருக்கிறார் இந்த குழந்தை. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், இந்திய வீரரும் ப்ரித்வி ஷா, மகாராஷ்டிராவில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலமாக நண்பர்களுடன் கோவா பயணித்திருக்கிறார். அப்போது கோல்ஹாப்பூர் வழியாக அவர் வந்த போது, போலீஸார் வண்டியை நிறுத்தி இருக்கின்றனர்.

ஒரு மணி நேரம்
உள்ளே பார்த்தால், நம்மாளு நண்பர்களுடன் உட்காந்திருக்கிறார். கையில் இ-பாஸ் கூட இல்லை. மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக, மாநிலத்திற்குள் எங்கு பயணிக்க வேண்டுமென்றாலும் இ-பாஸ் அவசியம். ப்ரித்வி அது தெரியாமல் சென்று சிக்க, போலீசார் பாஸ் குறித்து தெரிவிக்க, பிறகு அவர் தன் ஃபோனிலேயே பாஸுக்கு அப்ளை செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கழித்து, அவருக்கு பாஸ் கிடைக்க, போலீஸுக்கு பாய் சொல்லிவிட்டு கோவா கிளம்பியிருக்கிறார்.

எகிறும் எடை
இதில் என்ன காமெடி என்றால், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் இவர் இடம்பெறவில்லை. இதற்கு காரணம் ஓவர் வெயிட். உயரத்துக்கு மிஞ்சிய இவரது உடல் எடையைக் குறைக்க பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இந்திய அணியில் ரிஷப் பண்ட்டும், உடல் எடை சிக்கலில் தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவர் கடும் பயிற்சி மேற்கொண்டு, எடையை குறைத்து, அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். அவரை சான்றாக காட்டி, ப்ரித்வி தன் எடையை குறைக்க பிசிசிஐ அட்வைஸ் செய்துள்ளது. ஆனால், இங்கு அவரோ கோவா சென்றிருக்கிறார்.

தெறித்த ஸ்டெம்ப்புகள்
தொடக்க வீரராக அக்ரெஸிவ்வாக ஆடக் கூடியவர் ப்ரித்வி. அவர் இன்னும் சற்று முயற்சித்தால், அடுத்த சச்சினாக கூட வாய்ப்பிருக்கு (இதை சச்சினே சொல்லிருக்காப்டி). அவரது பேட்டிங் ஸ்டைலில் தான் சிக்கல் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டு இன்னிங்ஸில், பேட்டுக்கும், காலுக்கும் இடையே அவர் காட்டிய இடைவெளியால், ஸ்டெம்ப்புகள் தெரித்ததால் தான், இன்று அவருக்கும் இந்திய அணிக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எப்படியோ.. நல்லா ஃபிட் ஆகி வந்தால் சரி.


Click it and Unblock the Notifications