அதிக பயிற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முந்தைய ஐபிஎல் தொடர்களை விட 2020 ஐபிஎல் தொடருக்கு அதிக பயிற்சி செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தது. ஏப்ரல் - மே மாதம் நடக்க திட்டமிடப்பட்டு இருந்த ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்னதாகவே பயிற்சி செய்யத் துவங்கியது.
ஆறு நாள் பயிற்சி முகாம்
ஆனால், ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அதே போல, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடக்க செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ள ஐபிஎல் தொடருக்கு மற்ற அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பின் பயிற்சியில் ஈடுபட இருந்தன. ஆனால், சிஎஸ்கே சென்னையிலேயே ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்தியது.
கொரோனா வைரஸ் பாதிப்பு
இப்படி ஒவ்வொரு முறையும் அதிக பயிற்சி செய்ய முனைப்பாக இருந்த சிஎஸ்கே அணியில் முக்கிய வீரரான தீபக் சாஹருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர் கூடுதலாக 14 நாட்கள் குவாரன்டைனில் இருந்தார். பின்னர் பாதிப்பு நீங்கிய நிலையில் மீண்டும் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார்.
தயாராக முடியுமா?
அவரால் முழு அளவில் ஐபிஎல் தொடருக்கு முன் தயாராக முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு நீங்கி இருப்பதால் அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறாரா? என்பது கேள்விக் குறி தான்.
9 மாதங்களாக ஆடவில்லை
அது மட்டுமின்றி, தீபக் சாஹர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்தார். ஏப்ரல் மாதம் தான் அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இருந்தார். அதனால், அவர் சுமார் 9 மாதங்களாக கிரிக்கெட் ஆடவில்லை.
காயம் ஏற்பட வாய்ப்பு
நீண்ட காலம் கிரிக்கெட் ஆடாத நிலையில், தீபக் சாஹர் பரபரப்பான ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 14, 15 போட்டிகளில் ஆட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு தொடரின் காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. தீபக் சாஹர் ஆடவிட்டால் அது சிஎஸ்கே அணிக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
தோனி - சாஹர்
சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கடந்த இரண்டு சீசன்களில் தீபக் சாஹரை அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக பயன்படுத்தி வந்தார். அவரது பந்துவீச்சு மிகவும் துல்லியமாக இருந்தது. கட்டுக்கோப்பாகவும் பந்து வீசினார். சிஎஸ்கே அணியில் அவரது செயல்பாடுகள் காரணமாக இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார்.
சிஎஸ்கே வேகப் பந்துவீச்சாளர்கள்
தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் வேகப் பந்துவீச்சாளர்கள், தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், லுங்கி நிகிடி, சாம் கர்ரன். ஜோஷ் ஹேசல்வுட் ஆகிய ஐவர் மட்டுமே. இதில் இந்திய வீரர்கள் இருவர் என்பது தான் சிக்கல். ஒரு அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும்.
அணித் தேர்வு சிக்கல்
அதனால், தீபக் சாஹர் இடம் பெறாவிட்டால் அது அணியில் யாரை தேர்வு செய்வது என்ற சிக்கலை உண்டாக்கி விடும். கேப்டன் தோனி ஏற்கனவே, ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா இழப்பை ஈடுகட்ட திட்டமிட்டு வரும் நிலையில், தீபக் சாஹர் சில போட்டிகளில் இடம் பெறாமல் போனால் என்ன செய்வது என அதற்கும் சேர்த்து திட்டமிட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
முதல் போட்டி
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி செப்டம்பர் 19 அன்று தன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்தப் போட்டி தான் தொடரின் முதல் போட்டியும் ஆகும். அதற்குள் தீபக் சாஹர் தயாராகி விடுவாரா?