ஐபிஎல் அணிகள்
2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எட்டு ஐபிஎல் அணிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. அனைத்து அணிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தங்கள் வீரர்களை பாதுகாக்க கடும் கட்டுப்பாடுகளுடன் இருக்கின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு
எனினும், சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், ஐபிஎல் தொடருக்கு ஆபத்து ஏற்பட்ட போதும் நிலைமை சீராகி வருகிறது. அந்த 13 பேர் தவிர மற்ற சிஎஸ்கே அணியினர் பயிற்சியை துவக்கி உள்ளனர்.
சுரேஷ் ரெய்னா
இதற்கிடையே சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். சிஎஸ்கே அணியினர் கட்டுப்பாடுகளுடன் இருந்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால், அங்கே பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் தான் அவர் இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.
விலகிய ஹர்பஜன் சிங்
அதன் பின் மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சிஎஸ்கே அணியிடம் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவர் துபாய் செல்லாமல் இந்தியாவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
தனிமை
ஹர்பஜன் சிங் சிஎஸ்கே முகாமில் கொரோனா வைரஸ் பரவியதால், அந்த அச்சத்தில் தான் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகி விட்டார் என சிலர் கூறி வரும் நிலையில் ஹர்பஜன் சிங் தன் தனிமையை மதிக்குமாறு கேட்டுக் கொண்டு இருந்தார்.
குடும்பம் தான் காரணம்
தற்போது ஹர்பஜன் சிங்கின் நண்பர் ஒருவர் அவரது முடிவு பற்றி விளக்கம் அளித்துள்ளார். ஹர்பஜன் சிங் விலகல் முடிவை எடுக்க சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது காரணம் இல்லை. அவரது குடும்பத்தை விட்டு அவர் பிரிய விரும்பாததே காரணம் என்றார்.
20 கோடி கொடுத்தாலும்..
மனைவியையும், குழந்தையையும் மூன்று மாதம் பிரிந்து இருந்தால் மனம் திசை மாறும், போட்டிகளில் கவனம் செலுத்த முடியாது என அவர் கருதுவதாகவும், அந்த நிலையில், 2 கோடி கொடுத்தாலும், 20 கோடி கொடுத்தாலும் அது ஒரு விஷயமே இல்லை. பணம் அப்போது கடைசி இடத்தில் தான் இருக்கும் என்றார்.
சிஎஸ்கே அணிக்கு நன்றி
தன் முடிவை சிஎஸ்கே அணி முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதாக ஹர்பஜன் சிங்கே கூறி உள்ளார். அதற்காக தன்னால் நன்றி கூற முடியவில்லை எனவும் அவர் கூறி உள்ளார். சிஎஸ்கே அணி ஹர்பஜன் சிங்கிற்கு பதில் மாற்று வீரரை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.