திரில்... ஹார்ட் அட்டாக்.... பரபரப்பு..... ஆச்சரியம்..... இன்று பைனல்ஸ்!
Recommended Video

மும்பை: இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் சீசனின் கடைசி ஆட்டத்திலும் அதேபோல் வெற்றியுடன் சிஎஸ்கே முடிக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.
ஐபிஎல் சீசன் 11 அறிவிக்கப்பட்ட உடனேயே பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்கின. வீரர்கள் ஏலம் என, இந்த சீசனின் முதல் ஆட்டம் துவங்குவதற்கு முன் வரையிலும் சிஎஸ்கே தான் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு ஒரே காரணம், சிஎஸ்கேவின் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனிதான். அதற்கேற்றார்போலவே, இந்த சீசனில் மிகவும் சிறப்பாகவே சிஎஸ்கே செயல்பட்டது. புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் இருந்தது. கடைசியில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
அதே நேரத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் ஒரு பக்கம் சைலன்டாக புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தொடர்ந்து இருந்து வந்தது. கடைசியில் புள்ளிப் பட்டியலில் டாப்பில் இருந்தது.

பைனல்ஸ் வாய்ப்பு
முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே, பிளே ஆப் சுற்றின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் விளையாடின. அதில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சிஎஸ்கே பைனல்ஸ் நுழைந்தது. அதில் தோல்வியடைந்த ஹைதராபாத், நேற்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 13 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைந்துள்ளது.

மூன்றிலும் வெற்றி
இந்த சீசனில், சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் இதுவரை மூன்று முறை மோதியுள்ளன. லீக் ஆட்டங்களில் இரண்டு முறையும், முதல் தகுதிச் சுற்று ஆட்டத்திலும் சந்தித்தன. இந்த மூன்றிலும் சிஎஸ்கேவே வென்றது. நாளை நடக்கும் பைனல்ஸில் நான்காவது முறையாக சந்திக்க உள்ளன.

அணியின் பலம்
சிஎஸ்கே இந்த சீசனின் அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கில் கலக்கியுள்ளது. பந்துவீச்சும் மோசமில்லை. அதிரடி ஆட்டக்காரர்கள் கடைசி நிலை வரை உள்ளது சிஎஸ்கேவுக்கு பலம். அதே நேரத்தில் பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், அதைவிட வலுவான பவுலிங்கை கொண்டுள்ளது ஹைதராபாத். மிகக் குறைந்த ரன்களுக்கு அணி ஆட்டமிழந்தாலும், வெற்றியை உறுதி செய்யும் பவுலிங் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை.

யார் சாம்பியன்
இதுவரை 6 பைனல்ஸ் விளையாடியுள்ள சிஎஸ்கே, இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. அதே நேரத்தில் ஒருமுறை மட்டுமே பைனன்ஸ் நுழைந்த ஹைதராபாத் அதில் கோப்பையை வென்றது. திரில் வெற்றிகளுக்கு சொந்தக்காரர்களான சிஎஸ்கேவும், ஆச்சரியமூட்டும் வெற்றிக்கு சொந்தக்காரர்களான ஹைதராபாத்தும் இன்று இரவு 7 மணிக்கு துவங்கும் பைனல்ஸில் மோதுகின்றன. மீண்டும் ஒரு பரபரப்பான, ஹார்ட் அட்டாக், திரில், ஆச்சரியமூட்டம் ஆட்டமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications