மரியாதையா நீங்களே ஒத்துக்கங்க.. இல்லாட்டி பெயரைச் சொல்லிருவேன்.. சமி அதிரடி
பெங்களூரு: ஐபிஎல் சீசனின் போது என்னை அவமானப்படுத்தியவர்கள் அவர்களே வந்து அதை ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பெயர்களை நான் வெளியிட வேண்டி வரும் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி முன்னாள் கேப்டன் டேரன் சமி அதிரடியாக கூறியுள்ளார்.
Recommended Video
ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடியபோது தன்னை இனவெறியுடன் அவமானப்படுத்தினார்கள் என்று சமீபத்தில் சமி கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 2013 மற்றும் 2014 ஆகிய இரு சீசன்களில் அவர் ஹைதராபாத் அணிக்காக ஆடியிருந்தார்.
அந்த சமயத்தில், தன்னை காலு என்று கூறி கிண்டலடித்தனர் என்று சொல்லியிருந்தார் சமி. அப்போது அதன் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. என்னை மட்டுமல்லாமல் இலங்கை வீரர் திசரா பெரராவையும் கூட அவமானப்படுத்தினர் என்று சமி கூறியிருந்தார்.

மீண்டும் வெடித்த விவகாரம்
இதுதொடர்பாக முதலில் அவர் டிவீட் போட்டிருந்தார். பின்னர் அந்த டிவீட்டை அவர் நீக்கி விட்டார். ஆனால் தங்களுக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை என்று அப்போது சமியுடன் அணியில் இடம் பெற்றிருந்த இர்பான் பதான், பார்த்திவ் படேல், வேணுகோபால ராவ் ஆகியோர் கூறியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார் சமி.

பெயரைச் சொல்வேன்
இதுதொடர்பாக இன்னொரு டிவீட்டை அவர் போட்டுள்ளார். அதில், சமீபத்தில்தான் காலு என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டேன். எனக்கு மேலும் சில விடைகள் தெரிய வேண்டும். அதுதொடர்பாக அவர்களிடமே விளக்கம் கேட்கப் போகிறேன். அவர்களது பெயரை வெளியிடப் போகிறேன். அதற்கு முன்பாக அவர்களே என்னைத் தொடர்பு கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் பெயர்களை வெளியிடுவேன். நான் உங்களை எனது சகோதரர்களாகத்தான் பார்த்தேன் என்று கூறியுள்ளார் சமி.

விஸ்வரூபம் எடுக்கிறது
சமியின் இந்த புதிய டிவீட் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. யாரெல்லாம் சமியை இப்படி மோசமாக கிண்டலடித்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சக வீரர்களா அல்லது கிரிக்கெட் அணி நிர்வாகிகள் யாரேனுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு வேளை இதில் பிரபல வீரர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால் அது சர்வதேச அளவில் பெரும் பிரச்சினையாக வெடிக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.

ஐசிசி என்ன செய்கிறது
தனது டிவீட்டில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த விவகாகரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே இனவெறிக்கு எதிராக அனைவரும் போராட முன்வர வேண்டும் என்றும் டேரன் சமி கோரிக்கை விடுத்துள்ளார். ஐசிசி உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களைப் போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் சமி.


Click it and Unblock the Notifications