சிட்னி : ஐபிஎல் போட்டிகளை போல இங்கிலாந்து புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள 'தி ஹன்ட்ரட்' தொடரில் தான் இணையப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அவர் அந்த தொடரிலிருந்து விலகியதற்கு கொரோனா வைரஸ் காரணமில்லை. மாறாக, ஜிம்பாப்வேயுடன் ஆஸ்திரேலியா மோதவுள்ள தொடரில் தான் பங்கேற்று ஆடுவதற்காகவே, ஹன்ட்ரட் தொடரில் இணையவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்தமாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் துவங்கப்பட்டால் அதில் பங்கேற்று ஆடவும் அவர் விருப்பத்துடன் உள்ளதாக அவருடைய மேனேஜர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிறப்பான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் டேவிட் வார்னர். இவரது சிறப்பான ஆட்டத்தின்மூலம் பல கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி கைகொண்டுள்ளது. இந்நிலையில் பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் இவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இவரது எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் மீண்டுவந்து, தன்னுடைய திறமையை நிரூபித்து காட்டினார் வார்னர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முச்சதத்தை அடித்து, தன்னுடைய மறுபிரவேசத்தை பலமாக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தவிர்க்க முடியாத ஆட்டக்காரராக தன்னை மீண்டும் நிரூபித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் போன்றே இங்கிலாந்து திட்டமிட்டுள்ள 'தி ஹன்ட்ரட்' என்ற தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்காக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் அக்டோபரில் திட்டமிடப்பட்டுள்ள அந்த தொடரில் தான் இணையப் போவதில்லை என்று வார்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக தன்னுடைய அணி விளையாடவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்று தான் ஆடவிருப்பதாகவும், அதனால் அந்த தொடரில் விளையாடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரிலும் விளையாட டேவிட் வார்னர் விருப்பத்துடன் உள்ளார். காலம் சிறப்பாக அனுமதித்தால் ஐபிஎல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் காலம் சிறப்பாக செயல்பட சில மணிநேரங்களே தேவைப்படும் என்றும் அதற்கு நம்பிக்கை மட்டுமே தேவை என்றும் வார்னரின் மேனேஜர் எர்ஸ்கைன் தெரிவித்துள்ளார்.
The Hundred :David Warner Pulls Out