“சாப்பாடு இல்லை, துணி இல்லை, 24 மணி நேர அவதி”.. தீபக் சஹார் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு.. என்ன ஆனது
டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் தீபக் சஹார் கூறியுள்ள குற்றச்சாட்டு நாளை போட்டியை பாதிக்குமா? என்ற குழப்பம் உருவாகியுள்ளது.
நியூசிலாந்து தொடரை முடித்துக்கொண்ட இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது.
இதில் இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை வங்கதேசத்தின் தாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில் முதல் போட்டிக்காக இந்திய அணியுடன் டாக்கா சென்றடைந்த தீபக் சஹாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 24 மணி நேரமாக தனது பிரச்சினைக்கு அவர் யாரை தொடர்பு கொள்வது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்ததும் தெரியவதுள்ளது. இறுதியாக ட்விட்டரின் மூலம் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது அவர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவருக்கு மிக மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அவரின் உடமைகள் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லையாம்.

தீபக் சஹாரின் ட்வீட்
இதுகுறித்து ட்வீட் போட்டுள்ள தீபக் சஹார், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மோசமாக இருந்தது. முதலில் எங்களிடம் உரிய தகவலை கொடுக்காமலேயே விமானத்தை மாற்றினர். பயணிகளிடம் சற்று நேரத்திற்கு முன்பாவது கூறியிருக்க வேண்டும். இருப்பதிலேயே அதிக கட்டணம் வசூலிக்கப்படும் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் சாப்பிடுவதற்கென எந்தவொரு உணவையும் கொடுக்கவே இல்லையாம். இதில் உச்சகட்டம் தனது உடமைகள் எதுவுமே இன்னும் வந்து சேரவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

உடமைகள் எங்கே?
விமானத்தில் இருந்து இறங்கி 24 மணி நேரம் கடந்த போதும், இன்னும் அவரின் ஆடைகள், மற்ற இதர விளையாட்டு உடமைகள் எதுவுமே கொடுக்கப்படவில்லை. இதனால் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் நான் எதை வைத்து விளையாடுவது என அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நிறுவனத்தின் விளக்கம்
இதற்கு விளக்கம் அளித்துள்ள மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், உங்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்.பயணிகளுக்கு உரிய நேரத்தில் அனைத்து சேவைகளையும் கொடுக்க தான் முயன்று வருகிறோம். விரைவில் உங்களின் பிரச்சினை என்ன என்பதை கண்டறிந்து சரிசெய்துக்கொடுப்போம் எனக் கூறியுள்ளது.

சஹார் செய்த நன்மை
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இதே போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பயணிகளிடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் வந்துக்கொண்டே தான் உள்ளன. ஆனால் அதற்கெல்லாம் எந்தவொரு விளக்கமும் வந்ததில்லை. ஆனால் தீபக் சஹார் போன்ற நட்சத்திரம் குற்றம்சாட்டும் போது, பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications