அபார அணுகுமுறை
அவர் கன்னாபின்னாவென சுற்றி பந்து சிக்ஸர்களுக்கு பறந்து ஜெயித்திருந்தால் கூட அதிர்ஷ்டத்தில் ஜெயித்துவிட்டது எனலாம். முழுதாக 82 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பெற வைத்திருக்கிறார். ஒரு நீட் + பெர்ஃபெக்ட் பேட்டிங் எனலாம். ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரரைப் போல தீபக்கின் அணுகுமுறை இருந்தது.
போட்டுடைத்த பிரசாத்
சில ஷாட்கள் அவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்தது உண்மை தான் என்றாலும், இத்தனை பந்துகள் அவர் நின்று காட்டியது தான் இங்கு நாம் கவனிக்க வேண்டியது. இந்நிலையில், தீபக் சாஹரை 'கிரிக்கெட்டை விட்டு வேறு தொழில் செய்தால் உன் வாழ்க்கைக்கு நல்லது' என்று முன்னாள் இந்திய பயிற்சியாளர் கிரேக் சாப்பல் சில வருடங்களுக்கு முன்பு கூறியதாக முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
ஏன் வெளிநாட்டு கோச்?
இதுகுறித்து ட்வீட் செய்த பிரசாத், "தீபக் சாஹரின் குறைவான உயரத்தை குறிப்பிட்டு, ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியில் சேர்க்க மறுத்த முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பல், சாஹரை வேறு தொழில் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். அப்போது சாப்பல் ராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பதவி வகித்தார். இப்போது அதே சாஹர் தனது திறன்களைக் கொண்டு தனி ஆளாக இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் கொடுத்துள்ளார். இந்த கதையின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், உங்களை நம்புங்கள், வெளிநாட்டு பயிற்சியாளர்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என்று நெத்தியில் அடித்தாற் போல் குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கு முக்கியத்துவம்?
அவர் தனது மற்றொரு டீவீட்டில், "சில வெளிநாட்டு பயிற்சியாளர்கள் திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் திறமையான நபர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இந்த நேரத்தில் இந்திய அணியும், ஐபிஎல் அணிகளும் வெளிநாட்டு பயிற்சியாளர்களை தவிர்த்து, முடிந்த வரை இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
வரலாறு அறியும்
கிரேக் சாப்பல், சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது, பயிற்சியாளராக இருந்தவர். அப்போதே கறாரான பேர் வழி என்று பெயரெடுத்தவர். இதனால், கங்குலிக்கும் சாப்பலுக்கும் முட்டிக் கொண்டதை வரலாறு அறியும். சீனியர் வீரர்களாக சச்சின், டிராவிட், கும்ப்ளே, லக்ஷ்மன் என்று எவருடனும் அனுசரணையாக செல்லாமல் முரண்டுபிடித்தவர் சாப்பல். கங்குலியை கேட்டுப் பார்த்தா, கதை கதையாய் சொல்லுவார்!.