தோனி ரசிகன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இங்கு தான் ஒரு தோனி ரசிகனாக பங்கேற்று இருப்பதாக தெரிவித்தார். தனது தந்தை, பேரன் ,குழந்தைகள் என அனைவருமே தோனி ரசிகர்கள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தோனி ஜார்கண்டை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளை என்று குறிப்பிட்டார். இன்னும் பல ஆண்டுகள் சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தோனியை வலியுறுத்தினார்.
சென்னையுடனான உறவு
இந்த நிகழ்ச்சியில் பேசிய தோனி, ஐ.பி.எல். தொடருக்கு முன்பாகவே சென்னையுடனான தனது பந்தம் தொடங்கி விட்டதாக கூறினார். தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றதாக குறிப்பிட்ட தோனி, சென்னை தமக்கு வாழ்க்கையில் நிறைய விஷயங்களை கற்று கொடுத்ததாக கூறினார். சென்னை ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ரசிக்க கூடியவர்கள் என்றும், சென்னை அணிக்கு எதிராக சச்சின் விளையாடினாலும், சச்சினுக்கு மரியாதையும், வரவேற்பையும் தரக் கூடிய மக்கள் தான் சென்னை மக்கள் என்ற பெருமிதத்துடன் கூறினார்
எதிர்காலம்
தன்னுடைய கடைசி போட்டி சென்னை ரசிகர்கள் முன்பு தான் நடைபெறம் என்று திட்டவட்டமாக கூறிய தோனி, ஆனால் அது இந்த ஆண்டா, இல்லை 5 ஆண்டுகளுக்கு பிறகா என்று தெரியாது என தெரிவித்தார். இதனை கேட்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கடினமான சூழலில் சென்னை அணி நிர்வாகமும், ரசிகர்களும் எங்கள் பின் நின்று ஆதரவு அளித்ததாகவும் தோனி கூறினார்.
கண் கலங்கினார்
இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் மீது அநியாயமாக பழி சுமத்தப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக கூறினார். தடைக்கு பிறகு சென்னை அணி விளையாடிய போது, தோனி கண் கலங்கிவிட்டதாகவும், தோனி அழுது அப்போது தான் தாம் பார்த்தேன் என்றும் கூறினார். வீராகளின் திறமையை வெளிகொண்ட வருவதில் தோனி கில்லாடி என்றும் அவர் கூறினார்.