ஹராரே: இது சற்று வித்தியாசமான சம்பவம். ஜிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளர் மக்காயா டினி, இந்திய அணியின் கேப்டன் டோணியிடம் ஆட்டோகிராப் வாங்கி பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பர் இன கிரிக்கெட் வீரர் மக்காயா டினி. ஆனால் போதிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் ஓரம் கட்டப்பட்டவரும் கூட. இப்போது அவர் பயிற்சியாளராக மாறியுள்ளார். ஜிம்பாப்வே அணியின் தலைமைப் பயிற்சியாளராக சமீபத்தில்தான் நியமிக்கப்பட்டார் டினி.

டினி பயிற்சியாளராக வந்த பின்னர் ஜிம்பாப்வே அணி மோதிய முதல் கிரிக்கெட் தொடர் இந்தியாவுடன்தான். 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளிலும் ஜிம்பாப்வே தோல்வியுற்று தொடரை பறி கொடுத்துள்ளது.
இந்த நிலையில் மக்காயா டினி, கேப்டன் டோணியைச் சந்தித்து ஒரு பேட்டைக் கொடுத்து அதில் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளது.
இந்தப் புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான கருத்துக்கள் குவிந்துள்ளன. எதிரணியாக இருந்தாலும் ஆட்டோகிராப் கேட்டதும் புன்னகையுடன் போட்டுக் கொடுக்க எங்க தல டோணியால்தான் முடியும் என்று ஒருவர் கருத்திட்டுள்ளார்.