ஆசிய கோப்பை வெற்றிக்கு பின்
இந்தியா தன் ஏழாவது ஆசிய கோப்பையை வென்ற பின் இந்திய வீரர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டு இருந்த போது, தோனி, கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கோப்பையை அணியின் மிக இளம் வீரரான கலீல் அஹ்மதுவிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதை ஏற்ற ரோஹித் அணியிலேயே வயதில் சிறியவரான கலீல்-இடம் கோப்பையை கொடுத்து அழகு பார்த்து இருக்கிறார்.
மலரும் நினைவுகள்
இது பற்றி பேசிய கலீல், "தோனி மற்றும் ரோஹித் என்னிடம் வந்து கோப்பையை பிடிக்குமாறு கேட்ட போது நான் வாயடைத்து போய் விட்டேன். அப்போது உணர்ச்சிப் பெருக்கில் இருந்தேன். அந்த நிகழ்வை நான் எப்போதும் மறக்கமாட்டேன்" என நெகிழ்ச்சியாக கூறினார்.
தோனி செய்த உதவி
ஹாங்காங் அணிக்கு எதிராக தன் முதல் சர்வதேச அறிமுக போட்டியில் ஆடிய கலீல் அஹ்மது, துவக்கத்தில் தடுமாறினார். இந்திய பந்துவீச்சாளர்கள் யாருமே ஹாங்காங் அணியின் துவக்க இணையை பிரிக்க முடியவில்லை. அவர்கள் 150 ரன்களுக்கும் மேல் முதல் விக்கெட்டுக்கு சேர்த்து விட்டனர். கலீல் தனக்கு தெரிந்த அனைத்து வகையிலும் பந்து வீசியும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது, தோனி கலீல்-இடம், "இப்போது வீசும் அதே வேகத்தில், இன்னும் சற்று பந்து முன்னே செல்லும் வகையில் வீசு" என கூறியுள்ளார். அதே போல இரண்டு பந்துகளை வீசிய பின் விக்கெட் கிடைத்ததாக கூறுகிறார் கலீல்.
ஜாகிர் தான் குரு
கலீல் அஹ்மது, ஜாகிர் கானின் தீவிர ரசிகர். அவரை மானசீக குருவாக பாவித்தே, தன் கிரிக்கெட் பயணத்தை அமைத்துக் கொண்டுள்ளார் கலீல். ஐபிஎல் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் ஒரு வருடம், ஜாகிர் கானுடன் பயிற்சி செய்துள்ளார் இந்த இளம் வீரர். "நான் எப்போதும் ஜாகிர் கானை பார்க்கச் சென்றால் ஒரு டைரியுடன் தான் செல்வேன். அவர் சொல்வதை எல்லாம் குறிப்பு எடுத்துக் கொள்வேன். அவர் இல்லாத சமயங்களில் அந்த டைரி எனக்கு உதவும்" என தெரிவித்தார் கலீல்.