டெல்லி: இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அறிமுகமாகும் டெஸ்ட் போட்டிக்கான அணியின் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் விருத்தமான் சாகா காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. பெங்களூருவில் வரும் 14ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக விருத்தமான் சாகா அறிவிக்கப்பட்டிருந்தார்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது, சாகாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. அடுத்து நடைபெறும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு, சாகாவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக், 2010ல் வங்கதேசத்துக்கு எதிராக கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார். அதில் 16 ஆட்டங்களில் 498 ரன்கள் குவித்து, அந்த அணியில் அதிக ரன் குவித்த வீரராக உள்ளார். அதேபோல் விக்கெட் கீப்பிங்கில் 14 கேட்ச், 4 ஸ்டம்பிங் செய்து, அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பராக இருந்தார்.
இதைத் தவிர இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பை போட்டியின் பைனலில் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து, கோப்பையை வென்றுத் தந்தார். சமீபத்திய ஆட்டங்களால் தினேஷ் கார்த்திக், மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
2004ல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், 2007ல் இங்கிலாந்து எதிரான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் 3 அரை சதம் உள்பட 263 ரன்கள் குவித்தார். அந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரராகவும் இருந்தார். இருப்பினும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில், ஒரு சதம், 7 அரைசதம் என, 1000 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிரடியாகவும், பொறுப்பாகவும் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்குக்கு தன்னை நிரூபிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.