சச்சினுக்கு தேர்வுக் குழு ஷாக் கொடுத்தது.. ஆனால் டோணி யாருக்கு ஷாக் கொடுத்திருக்கார் பாருங்க!
டெல்லி: சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு குறித்து அதிர்ச்சி அடையாத இந்திய தேர்வுக் குழு, டோணி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்தபோது அதிர்ச்சியாகி விட்டதாம்.
டோணியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தேர்வுக் குழுவினர் ஆலோசித்து வந்தனர். ஆனால் இதுகுறித்து அவர்கள் டோணியிடம் பேச யோசித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் டெஸ்ட் ஓய்வு முடிவை அறிவித்து விட்டு அவர்களுக்கு ஷாக் கொடுத்து விட்டாராம் டோணி. முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் இதைத் தெரிவித்துள்ளார்.
2015 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பே டோணியை தூக்குவது குறித்து ஆலோசித்து வந்ததாம் தேர்வுக் குழு. ஆனால் உலகக் கோப்பைப் போட்டி நெருங்கிய நிலையில் அதைச் செய்ய அவர்கள் தயங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக சந்தீப் பாட்டீல் அளித்துள்ள பேட்டியிலிருந்து...

சில முறை ஆலோசனை
2015 உலகக் கோப்பைக்கு முன்பு டோணியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது குறித்து யோசிக்கப்பட்டது. ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து முடிவெடுக்காமல் இருந்தோம். காரணம் உலகக் கோப்பைப் போட்டியின்போது கேப்டனை நீக்கினால் சரியாக இருக்காது என்பதால்.

புது கேப்டன் செட்டாக காலம் பிடிக்கும்
புதிதாக கேப்டனை நியமித்தால் அவர் செட்டாக சில காலம் பிடிக்கும். ஆனால் நம்மிடம் காலம் குறுகியதாக இருந்தது. எனவே கேப்டனை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது என்று நம்பினோம். இருப்பினும் டோணியின் கேப்டன் பதவி பறிப்பு என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வந்தோம்.

விராத் மீது எனக்கு நம்பிக்கை
விராத் கோஹ்லியிடம் கேப்டன் பதவியை கொடுக்கலாம், அது சரியாக இருக்கும் என நான் நம்பினேன். அவரால் ஒரு நாள் போட்டியில் இந்தியாவை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என நம்பினேன். இருப்பினும் தேர்வுக் குழு ஒரு மனதாக அதுகுறித்து முடிவெடுக்காமல் இருந்தது.

டோணி முடிவு ஷாக் கொடுத்தது
ஆனால் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அப்போது இந்திய அணி நெருக்கடியான ஒரு தொடரை சந்தித்துக் கொண்டிருந்தது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் கேப்டன் என்று நான் டோணியைக் கூற மாட்டேன். காரணம், எல்லாமே நமக்கு சாதகமாக அப்போது இல்லை.

அது அவரது முடிவு
மிகவும் முக்கியமான கட்டத்தில் சீனியர் ஒருவர் திடீரென விலகும் முடிவை எடுத்தால் அது நிச்சயம் அதிர்ச்சியானதுதான். இருப்பினும் அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும். அந்த அடிப்படையில் டோணி முடிவையும் நாங்கள் மதித்தோம்.

கம்பீர், யுவராஜ் நீக்கத்திற்கு டோணி காரணமல்ல
இந்திய அணியிலிருந்து யுவராஜ் சிங், கம்பீர் ஆகியோர் நீக்கப்படுவதற்கு டோணிதான் காரணம் என்று கூறுவது தவறானது. அவருக்கும், இவர்களது நீக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களைத் தேர்வு செய்வதற்கு எப்போதுமே டோணி ஆட்சேபித்தது கிடையாது. அது முழுக்க முழுக்க தேர்வுக் குழுவின் முடிவுதான். டோணிக்குத் தொடர்பில்லை என்றார் பாட்டீல்.


Click it and Unblock the Notifications