பயிற்சியாளர்கள் மேல் உள்ள புகார்
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் துணை பயிற்சியாளர்கள் சஞ்சய் பங்கர், பாரத் அருண் மீது பல முன்னாள் வீரர்கள் புகார் கூறி வருகின்றனர். இந்திய பேட்ஸ்மேன்கள் நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையில் இவர்கள் பயிற்சியில் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அணில் கும்ப்ளே சர்ச்சை
இதில் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டதே சர்ச்சைக்கு உள்ளான விஷயம் தான். அணில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்தார். மிகவும் நேர்மையான அணில் கும்ப்ளேவின், கட்டுகோப்பான செயல்பாடுகள் கேப்டன் கோலிக்கு பிடிக்கவில்லை என கூறப்பட்டது. அதனால், ஏற்பட்ட மனக்கசப்பில் அணில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். அடுத்து கோலியின் தேர்வாக ரவி சாஸ்திரி இருந்ததால், அவரை பயிற்சியாளராக நியமித்தது கங்குலி, சச்சின், லக்ஷ்மன் அடங்கிய நிர்வாகக் கமிட்டி.
துணை பயிற்சியாளர்கள் யார் தேர்வு?
அப்போது ரவி சாஸ்திரியோடு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக டிராவிட் மற்றும் ஜாகிர் கான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அப்போது ரவி சாஸ்திரி தன் தேர்வாக சஞ்சய் பங்கர் மற்றும் பாரத் அருண் தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்து அவர்களை உதவி பயிற்சியாளர்களாக வைத்துக் கொண்டார். இதில் டிராவிட் பற்றிய ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கங்குலி வெளியிட்ட ரகசியம்
இந்த விமர்சனங்களின் தொடர்ச்சியாக அதிகம் வெளியில் தெரியாத ஒரு தகவலை கங்குலி வெளியிட்டுள்ளார். டிராவிட் முதலில் பேட்டிங் ஆலோசகராக இருக்க ஒப்புக் கொண்டுள்ளார். பின் ரவி சாஸ்திரியை போய் பார்த்து பேசியுள்ளார். அங்கே என்ன நடந்ததோ, அதன் பின் டிராவிட் அந்த பயிற்சியாளர் பணியை மறுத்துவிட்டார் என கங்குலி கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரிக்கு ரூட் கிளியர்
இதன் இடையே நிர்வாகக் கமிட்டி பயிற்சியாளரை மட்டுமே நியமிக்கலாம். உதவியாளர்களை நியமிக்க முடியாது என்ற சர்ச்சை எழுந்ததால், கங்குலி, சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிட்டனர். இதன் பின் ரவி சாஸ்திரி தன் இஷ்டம் போல, பாரத் அருண், சஞ்சய் பங்கர் ஆகியோரை நியமித்துள்ளார்.
சாஸ்திரி படே கில்லாடி தான் போல...அப்படி என்ன தான் பேசி இருப்பார்...கீழே கமண்ட்டில் கூறுங்களேன்...