மழையால் டிரா ஆன 2வது போட்டி
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழை மற்றும் மோசமான லைட்டிங் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மொத்தமாக 5 நாட்களிலும் சேர்த்து 134.3 ஓவர்கள் மட்டுமே போடப்பட்டது. போட்டியும் டிரா ஆனது.
ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை
கடந்த 1987ல் லார்ட்ஸ் மைதானத்தில் இதே அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட டெஸ்ட் தொடரில் இதே காரணங்களால் 112.5 ஓவர்கள் மட்டுமே போடப்பட்டது. இந்நிலையில், தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி தனது அடுத்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளது.
சீக்கிரமாக போட்டிகளை நடத்தலாம்
3வது போட்டி நாளை அதே ஏஜியஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், போட்டியை வழக்கமாக 11 மணிக்கு துவங்குவதற்கு பதிலாக 10.30 மணிக்கே துவங்கலாம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆலோசனை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் மைதானத்தின் அருகிலேயே உள்ளதால் இதை பின்பற்றுவதும் எளிது என்று அவர் கூறியுள்ளார்.
கிறிஸ் சில்வர்வுட் அதிருப்தி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பயோ பபள் முறையில் போட்டிகள் நடத்தப்படும் நிலையில், மழை குறுக்கீடு காரணமாக வெறுமனே கைகளை பிசைந்து கொண்டு மைதானத்தில் சும்மா இருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் டிவி மூலம் போட்டிகளை பார்ப்பவர்களுக்கும் இந்த மழையின் குறுக்கீடு ஏமாற்றத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வெற்றி பெற விருப்பம்
கொரோனா காரணமாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான தொடர் மூலம் மீண்டும் துவக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அடுத்ததாக நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த தொடரிலும் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டும் என்று சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.